Tuesday, March 27, 2012

உண்மையில் ஊனமுற்றோர் இவர்களா? அவர்களா?

ஏப்ரல் மாத சினேகிதியில் வந்த கட்டுரை. படங்களை க்ளிக் செய்து படிக்கலாம்.







Monday, March 26, 2012

பொய்திகள் வாசிப்பது புருடோத்தமன் - இம்முறை கொஞ்சம் லேட்டாக



    1.   டெபாசிட் இழந்த கட்சிகளின் அலுவலக வளாகங்களில் டப்பா செட்டி இஞ்சி லேகியம் விற்றவர் கைது. #ஜீரணிக்க முடியாத செயல்.

 2.வைப்பு நிதியாண்டுக்குள் தேர்தல் வைப்பு-நிதி இழப்பு ஈடுசெய்யப்படும் – பா.ம.க. ‘மாதிரி’ சட்டசபை தீர்மானம். 
#கூடங்குளத்தை ஆதரித்து, இலங்கையை எதிர்த்து, முல்லைப் பெரியாறு அணையை எதிர்த்து… இது எல்லாம் தீர்மனம் தீர்மானம்னு சொல்றாங்களே, ஏன், மானம் தீரணும்?




3.   ”வைப்பு மீட்பு இயக்கம்” – கட்சி வேறுபாடுகளை மறந்து தலைவர்கள் துவக்கம். தில்லித் தேர்தல் ஆணையம் நோக்கி ’நிதி’ கேட்டு நீண்ட பயணம். 

#சங்கர்&கோ-வில் முடிவு தெரிஞ்சு போச்சே, இனிமே கலீஞர் அண்ட் கோ, கேப்டநண்டுக்கோ, வைகோவண்டுக்கோ எல்லாம் என்ன செய்யும் எனக்  கேட்பவர்களுக்கு தக்க பதிலடியாம்.


4.   வெட்டி ப்ளாகர்கள் கண்டபடி கலாய்ப்பதால், இயக்கத்தின் பெயரை “டெபாசிட் மீட்பு இயக்கம்” என மாற்றுவதாகத் இனமானத் தலைவர் அறிவிப்பு. 

#நிதி மோசடிப் பிரிவின் கீழ் பொது நல வழக்கு போட்டுப் பாருங்களேன்.


5.   இயக்கக் கூட்’டங்’களில் நாக்கைத் துருத்திப் பேச தம்பிக்கு சிறப்பு அனுமதி-தமிழினத் தலைவர் தாயுள்ளத்தோடு அனுமதி. 

#துரோகிகளை பிறகு பார்த்துக்கொள்ளப் போவதாய் செவி வழிச் செய்தி.



6. கூடங்குளத்தில் உலை கிடையாது – அரசு திட்டவட்ட அறிவிப்பு. வீடுகள்-ஹோட்டல்கள்-சத்துணவுக் கூடங்கள் என எங்குமே சமைக்கக்கூடாது; அங்கிருந்து வெளியேறி அகதிகள் முகாமில் உலை வைத்து வடிக்கலாம் என்று அமைச்சர் நாராயணசாமி விளக்கம். #சொல்லிட்டாலும்…


7. ரஜினியின் கோச்சடையான் – கமலின் விஸ்வரூபம் படங்களில் ஜாக்கி ஷ்ராஃப், ராஹுல் போஸுக்கு பதிலாக வில்லன் வேடத்தில் அப்துல்கலாமை நடிக்க வைக்கவேண்டும் – ஞானி, முத்துகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் உருக்கமான வேண்டுகோள்.


#கோட்டா, ஆஷிஷ், சுமன் வயிற்றில் புளி


8. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அடியில் எரிமலை குறித்து அச்சம் தேவையில்லை – நடுவண் அரசு அறிவிப்பு. சேது சமுத்திரம் புகழ் டி.ஆர்.பாலு-நிதி சகோதரகள்-ராகுல் காந்தி கூட்டணியில் “எரிமலை தலைகீழ் திருப்பு” திட்டத்திற்கு மன்மோகன் அனுமதி. 

#இதனால், அது வெடித்தாலும் மெக்ஸிகோவில் பயிரிடப்பட்டிருக்கும் கிழங்குகள் அரிசி ஆகியவை தானே வேகும் என்றும், அதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் ப.சி.-க.சி. கூட்டறிக்கை. (ப.சிதம்பரம்-கபில் சிபல்)


9.  குஜராத்திலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ‘படம்’ பார்த்ததைத் தொடர்ந்து அனைத்து ச.ம.உ.க்களின் செல்பேசிகள் பறிப்பு. பதிலுக்கு பேஜர் அல்லது க்ரஹம் பெல் காலத்து டெலிஃபோன்களைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதி. 

#பேஜரில் ஆபாச செய்திகள் படிப்பதைத் தடை செய்ய முடியாது என்பதால் ‘பேஜர்-பேஜார்’ கோஷங்களைப் பெண்ணுரிமைச் சங்கங்கள் அறிவிப்பு. 



10. மணிமணியாய்க் கூடியிருந்து மாட்டிக்கொள்ளும் ஞானப் பழ கட்சியான பா.ஜ.க.வில் புதிதாக ’போர்னோ-க்ராண்ட்-நைட்-விங்க்’, மன்னிக்கவும், நாக்கு தடுக்கிறது, போமோக்ரானெட் அணி விரைவில் துவக்கம். 

#அந்த அணியினருக்கு ”ஸாம்சங் கேலக்ஸி” அலைபேசிகளும் தரப்படுமாம். இந்த அறிவிப்பு ச.ம.உ.க்கள் காதில் ’செமசீனுங்க-சோ செக்ஸி’ என்று தான் விழுந்திருக்கும். 


11.  ’கோ’ பட நாயகி தெரியும், ராதா மகள்; யார் இந்த ’க’ பட நாயகி – தொண்டர்கள் ஆர்வம். 

#கட்சித் தலை வேதனை என்பது இது தானோ!


12. ப்ரதிபா பாட்டீல் 22 நாடுகள் சுற்றுப்பயணம், செலவு 205 கோடி.
   #ஒரு கோடிக்குப் பத்து கோடின்னு வெச்சா கூட, எண்பது கோடிக்கு மேல ஆகாதே!


Wednesday, March 14, 2012

Tuesday, February 21, 2012

காதல் பத்து வகைப்படும் - ஒரு (comedy) ஆராய்ச்சியும், நீட்சியும்


சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் தான் அதுக்கு ஒரு M.A.Philosophy ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லணுமா? நாங்களும் விடமாட்டோம்ல.. விஷயத்துக்கு வருவோம்.
காதல் தெரியும். ஒரு தலைக் காதல் கேள்விப்பட்டிருப்போம். தறுதலைக் காதலும் தெரியும். வேற என்னென்ன தலைக் காதல் எல்லாம் இருக்குன்னு அதை அப்படியே கொஞ்சம் டெவெலப் பண்ணலாமா?
  • காதல்: எத்தனை தலை என்பது இருக்கட்டும், ஒரு கால் தான் இருக்கு. அத கவனிச்சீங்களா? அதுனால தான் ஒருத்தர ஒருத்தர் சொமந்துகிட்டு திரியறாங்க போல. #காதல்

  • ஒரு தலை: ஒரு உறைல ரெண்டு கத்தி not allowed. ஒரு தல தான் இருக்கலாம், ஓகே? #DecisionMaking
  • இரு தலை: ஜஸ்ட்டு மிஸ், ஒரு கமா. தல என்ன சொன்னாலும் அந்தம்மா இருன்னு ப்ரேக் போடுவாங்களே அதான் #இரு,தலைக் காதல்.
  • முத்தலை: இங்க தான் பிரித்தாளும் சூழ்ச்சி தேவைப்படுது. மூணு பேரு லவ்வு, முக்கோணக்காதல்னு டெண்ட்டு கொட்டாய்ல பாத்த படத்தையோ பாலச்சந்தரையோ நெனச்சு கொழப்பிக்காதீங்க. இது lover loving the kiss of love. இப்போ புரியுதா? #முத்த+லைக்+காதல்.
  • நாலுதலை: நான்கு தலைன்னு சில பேர் சொல்லலாம். அப்படிச்சொன்னா, அவங்கள நீ இன்னும் வளரவேயில்ல வயசுக்கே வல்லன்னு காமெடி பண்ணி அனுப்பிச்சிருங்க. குதலைன்னா மழலைன்னு ஒரு அர்த்தம். அதோட, அறிவிலான்னு ஒரு பொருள் இருக்கு. ஆகவே, நான் கடவுள் மாதிரி யாராவது நான் குதலைன்னா இப்போ காதல் தானே, நீ சொல்றது கல்யாணத்துக்கு அப்புறந்தான்னு அந்த அகோரிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள். (உபரி அறிவேற்றல்: ’கேப்’ இருந்தால் தானே ’எஸ்’ ஆக முடியும். அதனால தான் ரெண்டையும் பிரிக்க முடியாம எஸ்கேப்-புனு சேர்ந்தே வருது.) ஆக்சுவலா, ரெண்டு பேர் லவ் பண்ணினாலும் வீட்ல சொல்லாம பீச், பார்க்குன்னு சுத்த முடியாது. ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. எட்டு எனக்கு தெரியும்; ஆயிரம் உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க) அதனால, தோழியோட இவளும், தோழனோட அவனும் தனித்தனியா வந்துட்டு, கடற்கரைல தோழனையும் தோழியையும் கைவிட்டுட்டு கைகோத்துப்பாங்க. அவங்க பிக் அப் ஆயிக்கறது அவங்க பாடு. இது தான் #நாலுதலை.
  • அஞ்சுதலை: யாராவது பாத்துட்டா என்ன பண்றதுன்னு பைக்ல பின்னாடி ஒரு பொண்ணு உ.கால் to உ.தலை கவர் பண்ணி ட்ராவல் பண்ணுதே, அவள பின்னாடி ஒக்கார வெச்சு முன்னாடி ஒரு முகமூடிக் கொள்ளக்காரன் ஓட்றானே அந்த பயம் கலந்த பரவசக் காதல் தான் இந்த #அஞ்சு(ம்)தலை.
  • ஆறுசிரம்: அறு சிரம் இல்லை, கவலை வேண்டாம். ரெண்டு காதல் தோல்வி பார்ட்டிகள் லவ் பண்ணினா அது தான் ஆறுதலைக்காதல். அந்த ஆறுதல் உங்க இருவருக்குமே பிடிச்சிருக்கு. #ஆறுதல், லைக் ஆதல்.
  • ஏழ்தலை: ஏழு தலைக்கு என்னடா சொல்லப் போற மாட்டிக்கினியான்னு நீங்க குரூரமா சிரிக்கறது எனக்குத் தெரியுது. ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி ஆனா மாதிரி, ஒப்பிலி உப்பிலியானாற் போல, எழுதலை தான் உங்களுக்குப் புரியறதுக்காக ஏழ்தலைன்னு இறங்கி அருள் பொழிகிறது. எதை எழுதல? நீ எனக்கு உயிர், நான் உனக்கே உனக்கு… மன குடும்ப்பா மஞ்சி குடும்ப்பா;நூவே நாக்கு ப்ரேமா, ப்யார் கர்த்தி இப்படிப் பல மொழிகள்லயும் யாரோ யாருக்கோ பாட்டெழுதி எவரோ ட்யூன் போட்டு யார் பணத்துலயோ யார் யாரோ ஆடினாங்களே, அந்த பாட்ட இவிங்க ரெண்டு பேரும் பாடினாங்களே, அத எழுதி வெச்சு கையெழுத்து எல்லாம் போடல. பய புள்ளங்க, ரெண்டும் இப்போ வெவ்வேற எடத்துல கண்ணாலம் கட்டிக்கினு பரம சந்தோஷமா இருக்கு. #ஏழுதலைக் காதல்.
  • எட்டுதலைActivity to aim at achievement of Goal – ங்கற Principle of Commerce (kAmA+errs) இருக்கே, அது தான் இந்த எட்டுதல். அது பரவசமா கூட இருக்கலாம்; குறிக்கோளாவும் இருக்கலாம். கை நீளமா இருக்கறவங்களுக்கு பக்கத்து சீட்டுக்கு அடுத்த சீட் கூட எட்டலாம் :P அதான் #எட்டுதலை விரும்பும் மனது.
  • நவதலை: ஒன்பது = நவ. But, நவ = புதிய. மலர் தேடி தேன் பருகி, மலர் விட்டு மலர் தாவும் வண்டே, நீ ’கண்ட’ மலர்களிலும் அருந்துவதை எப்போது நிறுத்திவிட்டு சிங்கிள் புய்ப்பத்தில் சிங்க் ஆகி சிறப்புறுவாய் என்ற ஒலகமெகா Sinதனை சடன் ப்ரேக் போட்டு சம்மட்டியால் அடிப்பது தான் #நைன்லவ். (நயன்+ப்ரபு அல்ல).
  • 10Heads: ஒடனே ராவணனன் நெனப்பு வந்தா உங்கள ஒரு பய காப்பாத்த முடியாது. அம்மா ஆட்சி நடக்குது, ஞாபகம் இருக்கட்டும். 10 = பத்து. பத்து = பற்று, பந்தம், பாசம். அதனால, உங்க காதல் மேல பற்றுதலை வையுங்க. வரவு சரியாகும். சௌக்கியமா இருங்க. காதல் = காதலன்/காதலி = #பத்துதலை வை.
(படங்கள் உதவி: இணையம்)
[http://www.katturai.com/?p=2477 ல் சென்ற 14.2.12 அன்று வெளியிடப்பட்டது]

காதலர் தினம்:


ஃபிப்ரவரி 14 வந்தாலே ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் நிரம்பி வழிகின்றன.
என் ஜன்னலில்
பகலிலும்
நிலா!
நீ!!
போன்ற ‘அ ஆ’ கவிதைகளாலும் (அடடே ஆச்சிரியக்குறி) ஒரிஜினல் அக்கவுண்ட் தவிர வேறு பெயரிலும் கடை நடத்துபவர்களின் ‘உன் குழந்தை பெயரில் நானும், என் மகள் பெயரில் நீயும் இன்னும் வாழ்கிறோம்’ போன்ற மனம் திறந்த கீச்சுகளாலும் எவ்வளவு தான் கணினித்திரையை மங்கலாக்கி வைத்தாலும், கண்கள் கூசுகின்றன. தேர்தல் காலங்களுக்கும் வேலண்டைன் டேவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு; இரண்டுமே காது+அலர் தினங்கள். மடிக்கணினி வாழ்க்கையில் இமை கூட அலறுகிறது.
நீங்கள் காதலர் தினம் – நவம்பர்14 குழந்தைகள் தினம் என்று ’வலுக்கட்டாயமாக பொருத்தி மகிழ்வோர் சங்க’ உறுப்பினராக இருந்தால், ‘ஆமா, இதப் பெருசா சொல்றதப் பாத்தா என்னவோ, மத்த தேதில பொறக்கறவங்களோட பெற்றொர்கள் காதல் ஏதுமின்றிக் காமமே, ச்சீ…. ட்டங்கு சிலிப்பு, கருமமே கண்ணாயினர் போல தோணுதுங்களே…’ என்று யாராவது கேட்டால், கவலை வேண்டாம், வுட்ருங்க’.
மனைவியிடம் கல்யாண நாள், பிறந்த நாளை மறந்துவிட்டு செமத்தியாக ’வாங்கிக் கட்டிக்கொள்ளும்நண்பர்கள் சமாதானத்திற்கு ஆலோசனை கேட்கும்போதெல்லாம் அவரவர் முதலில் சந்தித்த நாள் காதலைச் சொல்லி கன்ஃபர்ம் பண்ணிக்கொண்ட நாள் இப்படி ஏதாவதொன்றை ஞாபக அடுக்குகளில் இருந்து உருவி, ஒரு பரிசையும் வழங்கிவிட்டால் சரியாகிவிடும்; வாங்’கிக்’ ‘கட்டிக்’கொள்ளலாம்’, என்பேன். அதை மறந்து தொலச்சதுக்குப் போன மாசம் தான் டின்னு கட்டினா என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.
இல்ல, தெரியாம தான் கேக்கறேன். ஒருத்தன் எவ்ளோ தேதிகளத் தான் ஞாபகம் வெச்சுக்கறது? இந்தத் தொல்லைக்கு இப்படி பொதுவாக ஒரு நாளை வைத்துக்கொண்டு அதையே எல்லோரும் கொண்டாடிவிட்டால் பிரச்சினை இல்லை பாருங்கள் என்போர் உண்டு. ஆனால், நமக்கென்று ஒரு நாள், பொருள் பொதிந்த ஒரு நினைவு, பிறருக்குச் சாதாரணமாக இருக்கும் ஒரு பொழுது நமக்கு மட்டும் அதிமுக்கியமாயிருக்கும் ஒரு ஜாலம், அதில் தொடர்புள்ள இரு மனங்கள் மட்டுமே அறிந்திருக்கும் மெல்லிய உணர்வுகளும், கூடி நிறைக்கும் அதன் கனமும், பேசியும் பேசாமலும் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளும், ‘யேய்.. அன்னிக்கும் இதே மாதிரி தான நம்ம பக்கத்து சீட்டு காலியா இருந்துது.. எப்படி இப்படி’ என்று நிகழ்தகவின் ஆச்சிரியங்கள் நிரலிகளை எழுதும் மகிழ்ச்சி… இதை எல்லாம் வேண்டாம் என்கிறீர்களா?
லவ் என்ற வார்த்தயை ப்ரத்யேகமாக உனக்கென்றே சொல்வேன், மற்றவர்களிடம் அன்பு, அஃபெக்‌ஷன் என்ற சொல்லாடலையே பயன்படுத்துகிறேன் என்பதிலிருக்கும் ஒரு வரையறை தான் உறவை பலப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ப்ரத்யேகமான வார்த்தைகளோ பொருட்களோ தான் நீ முக்கியம், யாரையும்-எதையும் விட என்ற விசேஷ உணர்வைத் தருகிறது.
ரோஜாப்பூவிலிருந்த்து லிப்ஸ்டிக் வரை எல்லாம் விற்பனையாகட்டும்; வணிக தந்திரங்களை விடுங்கள். உங்கள் காதலைக் கொண்டாடுங்கள், இன்னும் கொஞ்சம் பெருமிதத்துடன். சற்று முன்னால் எழுந்திருந்து காதலை/இணையை மனங்கவர்ந்த கவிதையை, இருவருமாய்க் கேட்ட இசையை, பரிசளிப்பதற்காக வாங்கிய புதியதொரு பாடலை ஒலிக்கவைத்து எழுப்புங்கள். தூக்கம் கலைப்பதாக இல்லாமல் இமை திறப்பதற்காய் இருக்கட்டும் அந்த நாள்.
***
சட்டசபையில் செல்ஃபோன்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஒரு நீதிபதி வழக்கு நடைபெறும்போது தூங்கிவிட்டார் என்பதால் ‘ங்’ஐ ‘க்’ ஆக்கி வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் செய்யத்தகாதன செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஆபாசப் படம் பார்த்ததினால் தான் இவ்விஷயம் ஊடகங்களிலும் இணையத்திலும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. எவரேனும் ஒரு குறுஞ்செய்தியை படித்தபடி இருந்திருந்தாலோ, தன் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரின் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டோ அப்டேட் செய்துகொண்டு இருந்திருந்தாலோ அது ஊடகங்களை ஈர்த்திருக்குமா, நாம் பதற்றம் கொள்வோமா என்றால் இல்லையென்றே எண்ணவேண்டியுள்ளது. ஆபாச வீடியோ பார்த்தனர் என்பது பெருங்குற்றமாகக் காணப்படும் அளவிற்கு மற்ற எதுவும் உறைப்பதில்லை. உண்மையில், சபையில் தாங்கள் ஆற்றவேண்டிய கடமை தவிர வேறு எதைச் செய்திருந்தாலும் அது எத்தனை சிறிய விஷயமாயிருந்திருந்தாலும் அது தவறு தான். ஆனால், அலுவலகத்திலிருந்தே கீச்சும் சமூகத்தில் செய்ய வேண்டியதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் குற்றமே என்பது எந்த அளவிற்கு முக்கியமாகத் தோன்றும் என்று சொல்லமுடியவில்லை. வீடியோ இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது சட்டசபையிலேயே புடவையைப் பிடித்து இழுப்பதும், நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்தி விரல் நீட்டியும் வெட்கப்பட்டும் பொழுதைக்கழிக்க ஆயிரம் வழிகள்.
***
CCL
மிஸ் யுனிவர்ஸ் – உலக அழகி – மிஸ் இந்தியா – மிஸ் சென்னை – மிஸ் அரக்கோணம் – மிஸ் கூடுவாஞ்சேரி….
ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டிகள், 20/20 – IPL, Celebrity Cricket League, அலங்காநல்லூர் அலம்பல்கள் V காட்டுமன்னார்கோயில் கண்ணிவெடிகள் என்று இது வளரக்கூடும். ஐபிஎல்லோ, சிசிஎல்லோ அது பெரும் பணம் விளையாடும் வியாபார விஷயம். இன்று மோதிக்கொண்டாலும் நாளை லாபம் பார்த்து சேர்ந்துகொள்வர்.
ஊர்ப்பக்கம் இது போல ஆனால், அங்கே வியாபாரம், லாபம், மச்சான் நீயும் முக்கியம் நானும் முக்கியம் என்ற மனோநிலைகளெல்லாம் இல்லாது நிஜப் பகையும் அடிதடியும், ஜெயிச்சவன் சந்தோஷத்துலயும் தோத்தவன் கவலையிலும் ஒரே பாரில் குடித்து பரஸ்பர கோவத்தில் அடிதடி போடும் காட்சிகள் சகஜமாகக் கூடும். அப்படியெல்லாம் ஆகாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.

[http://www.katturai.com/?p=2436  ல் சென்ற 13.2.12 அன்று வெளியிடப்பட்டது]

Tuesday, January 24, 2012

நான்கு பேர்களாய்த் தூக்குங்கள்


நவீன கட்டிடக் கலையின் உச்சத்தில் எழுப்பப்பட்ட வானுயர் வடிவங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இதே சமூகத்தில் தான் நாங்களும் வசிக்கிறோம்.
ஊனமுற்றோர் மையத்தையே இரண்டாவது மாடியில் நடத்தும் செம்மை அறிவு கொண்ட செயலற்ற வர்க்கங்கள் வழி நடத்திச் செல்லும் பாதையில் தான் விரதங்களும் வேண்டுதல்களும் இன்றியே முள்ளும் கல்லும் முட்டிக்கு மெத்தையெனக் காலம் தள்ளுகிறோம்.
கையை நீட்டியதும் தண்ணீர் சொரியும் குழாய்கள், விரலால் தொட்டதும் விவரங்களைத் தருகின்ற விஞ்ஞானம் வளர்ந்த சூழலில் தான் ஒவ்வொரு இடங்களிலும் படிக்கட்டுகளை சக்கர நாற்காலிகளால் கடக்க முடியாமல் கடின வாழ்க்கை நடத்துகிறோம். உதவி செய்வதில் பெருமைகொள்ளும் ஊர், தூக்கிவிட வந்துவிடுகிறது. இந்தச் சூழலில் எப்போது தவறான இடத்தில் கைவைத்துத் தூக்கி சக்கர நாற்காலி சேதமடைந்திடுமோ என்றும், கீழே விழுந்தால் எல்லோருக்கும் அடிபடுமே என்று கவலையுற்றும், ஒரு சாய்வுப் பாதை அமைத்தால் கௌரவமாகக் கடக்கலாமே என்றும் எண்ணுகிறோம். மேலும், இவன் இருந்தால் சற்று சிரமமோ என்று சுமையாகப் பார்க்கும் கருத்து மக்களிடையே உருவாகாமல் இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
சக்கர நாற்காலிகளுக்கான சாய்வுப்பாதை அமைந்திடாத அலுவலகங்கள், அஞ்சல் துறை, தொலைபேசியகம், வங்கிகள், ஆங்காங்கு முளைத்து நிற்கும் பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், பொது இடங்கள், மின்தூக்கிகளை (lift) அடையவே ஆறேழு படிக்கட்டுகள் கொண்ட மாடிகள், ஏறிப் பயணிக்க இயலாத நடைபாதைகள், சாலையில் செல்லும்போது பெருமழை வந்தால் ஒதுங்க முடியாத நிழற்குடைகள், வீட்டிலிருந்து காலையே கிளம்பி மாலை தான் வீடு திரும்புவோமெனினும் இயற்கையுடன் மிகுந்த போராட்டத்தில் ஈடுபடுத்தும் பயன்படுத்த முடியாத கழிப்பிடங்கள்.
எத்தனை சொல்வது, ஏமாற்றுவதில் வல்ல ’எத்தனை’ச் சொல்லி என்ன பயன்?
***************************************************************************** 


நான்கு பேர்களாய்
எத்தனை பரந்த மனது…
வழிந்தோடும் கருணையில்
கழுத்து வரை நனைந்துவிடுகிறோம்.

இறுக்கிப் பிடியுங்கள்.
சங்கிலியொன்று நெருடுமிடம் தான்
என் கழுத்து.
சங்கென்றும் கூறுவர்.

கழுத்து வரை வந்த கருணையை
விழுங்கித்தொலைக்கப் போகிறேன்
சங்கை இறுக்கிப் பிடியுங்கள்.

யாரேனும் வைத்திருக்கக் கூடும்
இன்னுமொரு சங்கு – கிடைக்காவிடில்,
கொண்டுவாருங்கள் கொள்ளையடித்தேனும்
சும்மா தான் இருக்கிறதாம்
சுதாமனின் தோழனிடம்.

நான்கு பேர்களாய் வந்தால் போதாது
ஆட்கள் வேண்டும் – முன்னே
ஆடிச் செல்வதற்கு.
கனவான்களாகக் கண்டுபிடியுங்கள்,
அவர்களுக்கும்
பரந்த மனதாக இருக்கட்டும்;
கருணை வழிந்தோடட்டும்.

அன்றைய நாளின் அருஞ்செயலாய்
புண்ணியமொன்றைச் செய்யப்போவதாய்
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும்
பகிர்ந்துகொள்ளுங்கள்.

நாக்கமுக்காவோ
யாத்தே யாத்தோ,
கொலவெறியோ
கற்பனை செய்துகொள்ளுங்கள்
குத்தான பாடலொன்றை,
கூடியிருக்கும் கனவான்கள்.

பெருவுடையான் கோயிலின்
உச்சிக்கல்லா என்ன
சாய்வுப் பாதை போட்டு
சந்தடியின்றி உருட்டிச் செல்ல…

நான்கு பேர்களாய்த் தூக்குங்கள்
காலிரண்டும் சூம்பிப் போய்
சவம் தானே இருக்கிறது
சக்கர நாற்காலியில்!



[http://www.katturai.com/?p=970 ல் சென்ற 16.1.12 அன்று வெளியிடப்பட்டது]

Sunday, January 15, 2012

மாட்டுப் பொங்கல் - மாடல்ல மற்றயவை?


வெறுப்பை உமிழ்தலிலும்
வெகுண்டே கத்தலிலும்
உறவுகளைக் கேவலப்படுத்தி 
உறுப்பைச் சொல்லித் திட்டிவிட்டு

இருட்டின் தவிப்பிலும் 
ஈருடல் தகிப்பிலும்
குறிகளே குறியாய் 
குற்றமின்றிச் சுவைத்தல் போல

உன்னதப்படுத்தலின் உச்சமொன்றில் 
விளிம்பில்

பசுவென்றும் தாயென்றும் பகட்டாய் 
விளித்தபடி

நாளொன்றை நல்கிவிட்டு நரியொன்றின் 
தந்திரமாய்

பசுக்களாய் எருமைகளாய் ஆடுகளாய்ப் 
பிரித்தாண்டு

இல்லத்தின் உள்ளே இறையென்று 
கும்பிட்டும்

இழுத்தே அறுத்துப்பின் இரையென்று 
கும்பி நிறைத்தும்

என்ன செய்யப் போகின்றாய்,
எனக்கென்று நாளெதற்கு?










(புகைப்படங்கள் உதவி: இணையத்தின் முகமறியா நண்பர்கள், நன்றி)