Saturday, November 30, 2013

Concert Schedule - Music Season, December 2013

Happy December Music Season - isai vizhA (இசைவிழா) - mArgazhi mahOthsav (மார்கழி மஹோத்ஸவம்)  to rasikAs and artistes. Here is my schedule. Looking forward to meeting many of you, welcome.

Dec 3 (Tuesday): Mohan Santhanam - M.R.Gopinath - Madippakkam Murali for Narada Gana Sabha at Mini Hall, 6:30PM

Dec 5 (Thursday): Vasudha Ravi Venkata Subramanian - Nerkunam Manikandan for Karthik Fine Arts at NGS 
Mini Hall, 10:00AM

and 

Aishwarya Vidhya Raghunath - Aditi Krishnaprakash for Karthik Fine Arts at NGS Mini Hall, 2:00PM

Dec 6 (Friday): Gayathri Venkataraghavan - Padma Shankar - Guru Prasad for Bharathiya Vidhya Bhavan at BVB Mail Hall, 6:45PM

Dec 8 (Sunday): J B Keerthana Bharadwaj - Vijayraghavan Ck for Chennai Fine Arts at Arkay Convention Center (ACC) at 5:00PM

Dec 15 (Sunday): T.K.Ramachandran - V.L.Kumar - S. Harihara Subramaniam for Nada Inbam at Raga Sudha Hall, 6:15PM

Dec 17 (Tuesday): C.S. Sajeev - Priya Hariharan - Sunil Kumar for The Music Academy at 1:45PM

Dec 22 (Sunday): Ramnath Iyer - Gopinath Iyer at residence of Jaysri JeyaraajKrishnan at 6:00PM

Dec 24 (Tuesaday): Aishwarya Vidhya Ragunath - Trivandrum Sampath for The Indian Fine Arts Soceity at Balamandir German Hall, 3:00PM

Dec 28 (Saturday): P. Gnanavarathan - Anayampatti G Venkatasubramanian for Mudhra at Infoys Hall, 4:30PM

Dec 31 (Tuesday): Vijayalakshmy Subramaniam - Mysore Srikanth - Anirudh Athreya for The Indian Fine Arts Soceity at Balamandir German Hall, 4:30PM

Thursday, September 12, 2013

பல்லடம் ஸ்ரீ ராமச்சந்திரன் ஸார்



கோவையில் அவர் இல்லத்தில் சில ஆண்டுகள் முன்பு
--------------------------------------------------------------

மூன்றாவது முறையாக அந்த அனுபவம் ஏற்பட்டது இன்று. 90 களில் சித்தப்பா, பல வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் அம்மா...

த்யானம் செய்ய பெரியவாளின் எதிரில் அமர்ந்ததும் ஏதும் கோவையாகச் செய்ய விடாமல் முற்றிய இரவொன்றில் அடர்வனத்தின் ஆழ்ந்த கருமை, இமை மீது ஏறிப் படர்ந்ததைப் போன்ற உறக்கம் வந்து தள்ளியது. விளக்கேற்ற விடாமல், மந்திரத்தில் மனம் லயிக்க விடாமல், மயங்கிக் கிடக்கையிலும் ப்ரக்ஞை தோன்றும் நன்கறிந்த ஒரு பாராயணத்தின் வரிகளை மறந்துபோய் மலங்க மலங்க விழிப்பதைப் போன்று, தைல தாரையொன்று நீர்த்துப் போய் குழாய் ஜலமாய்த் தெறிப்பதைப் போல நிலைபடாமல் தவித்தது. மனதிற்கு உகந்த ஜீவனோ நெருங்கிய உறவோ உடல்நீத்த செய்தியொன்று வரப்போகின்றதென்று பாரம் சுமந்தபடி மதியம் ஒரு மணியிலிருந்து மனத்தின் ஓரத்தில் ஞாபகப் பட்டைகளை கொத்தியுரிக்கக் காத்துக்கிடந்தது ஒரு மனங்கொத்தி.

பல்லடம் ஸ்ரீ ராமச்சந்திரன் ஸார் தான் என்னுடைய முதல் குரு. மிருதங்கம் என்னை விடப் பெரியதாக இருந்த வயதில் வாஞ்சையுடன் வாரித் தந்தவர். குறும்பாக ஒரு பார்வை, எதையுமே 
எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை, அவர் சொல்லித் தரும் பாடங்களத் தவிர வேறு எதையேனும் சொந்தமாகவோ பெரிய வித்வான்கள் வாசித்துக் கேட்டதையோ முயன்றால் பாராட்டுவார். சுத்தமான நாதமும் கம்பீரமான கும்கியும் வாசிப்பார். என் மீது அலாதிப் ப்ரியம் உண்டு. நானும் அவரைக் காணுந்தோறும் நெகிழ்ந்திருப்பேன். கோவை செல்லும்போதெல்லாம் பார்த்து வருவேன். ’நீ எதுக்குப்பா கஷ்டப்படறே... வந்திருக்கேன்னு ஒரு ஃபோன் பண்ணினா நானே வந்து ஒன்னப் பாப்பேனே’, என்பார். சங்கீதத்திற்கு ஸ்நானப் ப்ராப்தியே இல்லாத ஒருவரைக் கொண்டு வந்து சேர்த்தால் கூட அவர் வகுப்பின் ஸ்வாதந்தர்யமும் சூழலும் அவர்களை மறுபடி வரவழைக்கும். சுரேஷ் நாராயணன், ரமேஷ், கண்ணன், மஹாதேவன், சௌரிராஜன், சென்னிமலை ஸ்ரீதர், சீனு, கோபாலகிருஷ்ணன், ரங்கராஜன், ஸ்ரீராம் எல்லோரும் அரை வட்டமாக அமர்ந்து குறைப்புகளுடன் ஒரு தனி வாசிக்க, கிருஷ்ணன் போல ஒரு விஷமப் புன்னகையுடன் மெல்லிய குரலில் கிண்டலாக ஏதேனும் சொல்லியபடி பொறுமையாகத் தாளம் போடுவார்.
லால்குடி ஸ்ரீ ஜயராமன் அவர்களுடன் ஊட்டியில். 70கள் என எண்ணுகிறேன்.





அவரும் சிங்காநல்லூர் ராதாகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்துவிட்டால் அந்த இடமே அமர்க்களப்படும், சங்கீதமும் கிண்டலும் தளும்பும். நாளொன்றின் முடிவில், தான் எங்கோ கேட்டதை ஒரு மாணவன் முயன்று பார்ப்பது, பயமின்றி ஒரு பாடத்தை அணுகுவது எல்லாம் அனிச்சை செயல் போல நிகழ்ந்து மனத்தில் ஊடுருவியிருக்கும்.

சிவராமன் ஸாரிடம் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆசையைச் சொன்னபோது மிகவும் ஊக்குவித்தார். கோவை செல்லும் ஒவ்வொரு முறையும் சிவராமன் ஸார் பல்லடம் சஞ்சீவி ராவ் அவர்களுக்கு வாசித்ததைப் பற்றி, அவரிடம் நான் இருப்பது பெரும்பேறு என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். சிறந்த மிருதங்க வித்வானாக விளங்கி வரும் பல்லடம் ரவி அண்ணா அவருடைய மகன் தான். மதுரை வானொலியில் நிலையக் கலைஞராக இருக்கிறார். ராமச்சந்திரன் ஸாரின் இன்னொரு சிஷ்யர் ஸ்ரீனிவாசன் காரைக்குடி ஸ்ரீ மணி அவர்களிடம் சேர்ந்து சில வருடங்கள் சென்னையில் இருந்துவிட்டுப் பின் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாடு கொண்டு ஈரோட்டிலேயே இருந்து வருகிறார்.

எண்பத்தி நாலு வயதில் சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார். இந்த விஜயதசமிக்கு ராமச்சந்திரன் ஸாருக்கென்று எடுத்து வைத்த வேஷ்டியை எப்போது வாங்கிக்கொள்வார்? சென்ற ஜூலை ஐந்தாம் தேதி, ஒமஹாவின் Zorinsky Lake-ல் ஒரு பிரதோஷ வேளையில் அதன் உள்ளே சிறிது தூரம் இட்டுச்சென்ற மரத்தாலான பாதையில் விளிம்பில் இறங்கி அமர்ந்து நாராயணஸ்வாமி அப்பா, அழக நம்பியா பிள்ளை, தஞ்சாவூர் வைத்யநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், ஆறுபாதி நடேச ஐயர், சாக்கோட்டை ரங்கு ஐயங்கார் போன்ற வித்வான்களின் பெயரைச் சொல்லி இரு உள்ளங்கைகளிலும் ஏந்தி நீர்வார்த்த ஞாபகம் வந்து, முதல் குருவின் வியோகத்தைக் கேட்ட சிஷ்யன் உடனே செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி, நினைவலைகள் மண்ணுக்கு தள்ளிவிடப் பார்க்க, தேர்ந்த மீனவரைப் போல அதன் ஆற்றலை ஏமாற்றி மனக்கடலின் மையம் நோக்கிச் செல்கிறது, ஆனால் தளர்ந்தபடி.

ஸ்ரீ குருப்யோ நமஹ.

Wednesday, July 31, 2013

The crow and the Fox story in madras slang!

நம்ப காக்கா இல்ல காக்கா, அதாம்பா... எதுனா கொத்திக்கினு
கருப்பா பறக்குமே, அது இன்னா பண்ச்சு... சொம்மா கெடந்த கெயவி, tiger பிஸ்கட்ட பிரிச்சுக்கினு இருக்கும்போது, அத்த சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணி, 

நைஸ்ஸா கெயவி அப்டிக்கா திரும்ப சொல்லோ, அப்பீட்டுன்னு அள்ளிக்கினு பூட்ச்சு.... இத்த பாத்துக்கினே இருந்த ஒரு நரி, சுகுரா நூல் புட்ச்சா மேரி காக்காவ ஃபாலோ பண்ணிக்கினே வந்து, மரத்தடீல குந்திகிச்சு.

காக்காவ டபாய்க்க, “இந்தா மே காக்கா, ஷோக்காக்குற நீ...அத்தொட்டு நம்போ எலவசம் போட்டோ கானா ஒலகநாதன் கணக்கா ஒரு ஸாங் எட்த்து வுடு”ன்னுச்சு.

நரியப்பாத்தும் கூட மெரசல் ஆவாத தெகிரியமா, விஜயஷாந்தி கணக்கா குந்திக்கினிருந்த காக்கா, "டாய்... இன்னாடா.... யாரப்பாத்து இன்னா வார்த்த சொல்ட்ட நீ... கமல் தாண்டா நம்ம தல.. அவுரு ஆக்ட் குடுத்த பாட்டு எதுனா பீராஞ்சு பாடுவனே கண்டி, வேற பலான பலான ஆளுங்க ஒண்யும் வாயால கூடப் பாட மாட்டேன்" ன்னு உதார் வுட்டுச்சு.

தோடா... பாவமாக்குதுன்னு அப்பால, "இளமை... இதோ... இதோ.. இனிமை..... இதோ இதோ.. காலேஜு டீனேஜு காக்கா அல்லாருக்கும் யெம்மேலதான் லுக்கு"ன்னு பாடிச்சாம்பா.

ஆனா ஒண்ணுப்பா... மெய்யாலுமே பாவதர் கணக்கா காக்கா ராகத்த வலிக்க சொல்லோ, ’இதென்னடா அக்குறும்பு... கேட்டா gare ஆவுற மேரி பாட்தே இதுன்னு’, பேஜாரா பூட்ச்சுபா நரி.

இப்போ இன்னா ஆவும்றே? அங்கதான் வெக்கறேன் டுவிஷ்ட்டு... காக்கா பாடிக்கினே போச்சா.. ராஜா சார் ஃபேனுங்கோ மேரி, எப்டி பாட்து பார் இதுன்னு நரி கண்ண மூட்ச்சா? ஒரு நாய் நரிக்கே தெரியாம, ம்ம்மவனே.. மவுண்ட் ரோட்ல தண்ணிலாரி முதுகு மோந்துக்கினு வர்ற கணக்கா வந்துக்குது...

அது கபால்னு உள்ள பூந்து. ‘ நாந்தான்.. அது இன்னாது.. மச்சானா.. இல்லபா, சகல கலா வல்லவன்னு’ அத்த சுட்டுக்கினு ஓடீருச்சு’
-------------------------------------------------------------------------

நான்கு வருடங்களுக்கு முன் (10-2-2009) பொழுதுபோகாத வேளையில் எழுதியது. வா வா கருப்பாட்டை நினைத்துக்கொண்டேன்

Sunday, July 21, 2013

தேநீர்.




விளிம்புகள் தொட்டதும் ரணமாகும் உதடுகளால்
புறக்கணிப்பின் ஆற்றவொண்ணா வலிகள்
நிரம்பிய கோப்பையை
நிதானமாய்ப் பருகுகிறேன்.

கண்களால் அளந்தோ
கனத்தால் கணித்தோ
கரண்டி  ஒன்றின் காம்பினாலோ
ஆழமறிய முற்படுகையில்

இரண்டு மிடறுகளுக்கிடையேயான 
இடைவெளிகளில் எல்லாம்
நாசிக்குள் நுழைந்து
நெருப்பாகிறது அமில மணம்.

ஆற்றிக்கொள்ளவென அடியில் தட்டோ
அகன்றதொரு பாத்திரமோ
அருகில் இல்லை; அமிலத்தின் கரைப்பில் 
குளிரென்ன சூடென்ன.

அருந்தாதே வேண்டாமென அனுபவங்கள் அடித்துக்கொள்ள
அவ்வளவுதான் ஆயிற்றென்று அமுதமாய் மனம் மயக்க
புத்தியின் அடிக்குரலை இடக்கையால் புறந்தள்ளி 
கோப்பையின் பிடியை இன்னமும் இறுக்கி 
விரல் கடுக்க ஏந்தியபடி
வீம்பாய் அருந்துகிறேன்

வலிகளும் ரணங்களும் வாழ்ந்துகொண்டேயிருக்க
பிழைக்கவென்றே சாகவோ
சாகவென்றே பிழைப்பதோ
செய்தபடி.



Thursday, March 7, 2013

ஆரும் அறியக்கூடாதென...


Happened to see this photo in Facebook. A heart with head phones! The picture reminded me the sweet nothings, the whispers of heart to the wishful ears of love...  





அர்த்தமற்ற வார்த்தைகள் அவர்களுக்கு 
அந்தரங்க உச்சாடனமது நமக்கு.

அஹம் தொலைத்த காதலில் தான் 
ஆழ்மனத்தின் நினைவைக்கூட
ஆவலாய் அறிகின்றன காதுகள்,

ஆரும் அறியக்கூடாதென 
இயர் ஃபோனில் இனிக்கின்றன 
இயம்பிடாத சேதிகள்.

ஈருயிர் அற்றுப்போனதில் 
ஈற்றடிகள் தோன்றியதில்
உளமுவந்த காதலொன்று
உலகளந்து மிதக்குதடி. 

ஊசிமுனைக் கூராய் 
ஊனெங்கும் உழுதுபோட்டு 
ஊர் உறவு மறந்துபோய்
ஊடுருவிக் கூடுதடி.

ஊட்டுதலின் அன்பொன்றை
ஊர்ச்சிதம் செய்தபின்
ஊண் தேடும் நா-வயிறும்.
ஊமையாகிப் போனதடி.

எடுத்தே வைத்துக்கொள்ள
எப்போதும் விழைவேனே,
என்னாவாயிற்று எனக்கு
எல்லாமே உனதென்றேன்.

ஏந்திழையைக் கண்டபின்னே
ஏதுமில்லை வேறொன்றாய்
ஏகத்துவப் பேச்செல்லாம் 
ஏய்ப்பதற்கே இல்லையடி.
ஐம்பொறிகள் அனைத்திற்கும்
ஐந்திரியாய் நீயிருக்க
ஐங்கணைகள் துளைத்ததில்
ஐயையோ! எனையிழந்தேன்.

ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்தபடி பேச்செல்லாம்,
ஒரு பார்வை பரிமாறும்
ஓராயிரம் கதை சொல்லும்.

ஓயாது அன்பு செய்யும்
ஓடையெனக் குளிர்ந்திருக்கும்
ஓராட்டில் அமைதிகொள்ளும்
ஔவுதலில் அமுதுண்ணும்

ஔடதமாய் இதம் செய்யும்
ஔவியம் பேசாமல்
ஔசித்தியம் வார்த்தையாகும்
அஃதொன்றே வாழ்க்கையாகும்.

[ஆரும் - யாரும்
ஊன் - தசை, உடல்
ஊர்ச்சிதம் - உறுதிப்படுத்துதல் - make sure
ஊண் - உணவு
ஏந்திழை - அழகிய பெண்
ஐந்திரி - ஐந்திரன் = இந்திரன்; ஐந்திரி = இந்த்ராணி 
( you are the queen, ruling all my senses)
ஐங்கணைகள் - மன்மதனின் ஐந்து அம்புகள் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம்)
ஓராட்டு - தாலாட்டு
ஔவுதல் - கவ்வுதல் (லிப் லாக்)
ஔடதம் - ஔஷதம் = (காதல்) நோய் தீர்க்கும் மருந்து
ஔவியம் - பொறாமை, தீவினை
ஔசித்தியம் - something which is apt and acceptable]

BTW, கண்ணுக்கு அணிவதை மூக்குக்கண்ணாடி என்பது போல அது என்ன காதுகளுக்காக அணிவதை ஹெட்ஃபோன்ஸ் என அழைப்பது ஏன்? தாங்கிக்கொள்வதாலா? என்னமோ, ஒன்று நிச்சயம், மேலே எழுதிய வரிகளில் அணி-வதை, படிக்கின்ற இ(ல)க்கணமே வதை எல்லாம் உண்டு. :)


Monday, February 25, 2013

வித்யாவின் மரணமும் வலித்தது


பள்ளிச் சீருடையில் பாவாடைக்கும் காலுறைக்கும்
இடைவெளி ஈர்த்ததென இளித்தபடி காதல் சொல்லு

காதலை மறுத்ததும் காதகனாய்க் கருவறுக்க
சாதலை தண்டனையாய்த் தரவென்று முனைந்து
முகமற்றுத் திரியட்டுமென முதுகிலோ முன்போ
தீராத வடுவாய்த் திராவகம் வீசு.

பேருந்தில் செல்கையில் பேச்சுக் கொடுத்தபடி
ப்ளேடுகளை மென்று முகத்தில் துப்பு

மின்சார ரயிலில் அருகிலே நின்றபடி
மார்பகத்தின் பிளவில் தேளொன்றைப் போடு

அலுவலகம் விட்டு அசதியாய்த் திரும்புகையில்
மாஞ்சாக் கயிற்றால் கழுத்தை அறு

பார்த்ததும் படுத்து கால்களை அகட்டாதவளின்
பாவாடைக்குள் பட்டாசுகளைப் போடு

காதலர் தினமென்று காதணியும் வளையலும்
வாழ்த்துமடல்களும் வாடாத பூக்களும் 
வாங்கிய கணக்குகள் கூட வணிகத்தில் தெரிந்துவிடும்

சிகரெட்டில் சுட்டுத் தீய்த்த பால் குடித்த காம்புகள்
புழைக்குள்ளே நுழைந்து புணர்ந்திட்ட கடப்பாறைகள்
கெமிஸ்ட்ரி சரியில்லையெனக் கொண்டுவரும் அமிலங்கள்
தெரியுமா அவள் ஒரு லோலாயி எனப் பரப்பும் கதைகளின்

அறியப்படாத கணக்குகளை
சொல்லப்படாத வன்புணர்வுகளை
எந்த வணிகம் தொகுத்துப் போடும்
எவ்வூடகம் நிறுத்திச் சொல்லும்

திராவகம் எரித்திட்ட எலும்புகளின் முனைகளால்
கொதித்தே வெந்த சதைக்குள் தொற்றுகளால்

மரணத்தைத் தழுவுகின்ற ரணமான நொடிக்கு முன்
வன்புணர்ந்த ஆண்குறியொன்று எறும்புப் புற்றிலோ
எலிவளையொன்றிலோ நுழைக்கப்பட்டு 
கட்டிப்போட்டதாய் கனவொன்று வரும்...

உறக்கத்தில் ஓரமாய்ச் சிரித்தபடி
நாடொன்றை எரித்தவளின் நகரத்தில் 
தானேயெரிந்தபடி தேசத்தைச் சபித்தபடி
செத்தே தொலைவேன்
செய்வதென்ன இங்கு.

Photo courtesy: Internet












 
 

Wednesday, January 30, 2013

Viswaroopam அளிக்கும் “நடந்தாலும் நடக்குங்கோவ்”



இனி எந்த வழக்கானாலும் நீதிபதியானவர் தான் அளிக்கப்போகும் தீர்ப்பை, அமைப்புகளிடம் காட்டி கருத்துக் கேட்ட பின்பு திருத்தி எழுதி அதைக் கோர்ட்டில் ஒட்டிவைக்கலாம்; ஊடகங்களில் வெளியிடலாம்.

பிறகு SMS ஓட்டு அடைப்படையில் தீர்ப்பை இறுதி செய்யலாம்.

அதிலும், எதிர்ப்பு ஓட்டுகளைப் பதிவு செய்தவர்கள் மனம் புண்படாமலிருக்க காலையில் அவர்கள் அக்கவுண்ட்டில் நூறோ இருநூறோ செலுத்தி மாலையில் டாஸ்மாக்கில் திரும்ப வசூலித்துக்கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘அமைப்புகள்’ (எந்த மதம், சங்கம், யூனியன் ஆனாலும்) சார்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டே கதை எழுதும்போதோ படமெடுக்கவோ கொலை கொள்ளையடிக்கவோ பாலியல் வன்முறையோசெய்யலாம்.

Twitter Facebook-ல் கூட முதலில் அமைப்புகளுக்கு மெயில் அனுப்பி Moderator அனுமத்தித்தால் நேரடியாக நம் அக்கவுண்ட்டில் போஸ்ட் ஆகும்படி லின்க் செட் செய்துவிடலாம்.

மூன்றே வாரங்களில் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கதை, திரைக்கதை, காவியம், புதினம், வலைப்பக்கம் எழுதுவது எப்படி என்று புத்தகம் வெளியிடலாம்.

கோர்ட்டுகளை எல்லாம் குழந்தைகள் மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் வாடிகளாக மாற்றிவிடலாம்.

தலைமைச் செயலகம் என்ற நாமதேயத்தை தலைமைச் செயல் அகலும் என்றோ The-Lie-My செயற்கலகம் என்றோ மாற்றிவிடலாம்.

நாற்றம் ஒன்றே.. ச்சீ.. மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது.

Wednesday, January 23, 2013

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2013



வாசனைத் திரவியங்களை வாங்கு முன் மெல்லிய சீறலாய்ப் புறங்கையில் படரவிட்டு,
 காற்றில் கையுதறி மணம் கண்டு, எதையோ இன்னும் தேடி, காப்பிக்கொட்டைகளை முகர்ந்து பார்த்து மூக்கின் திறனை மீட்டெடுத்து, தேர்வு செய்யக் கொஞ்சமாய் தவித்து, அருகில் இருப்பவளை இன்னும் அருகே அழைத்து உன் கையில் தெரியுமா இதன் வாசனை என்று கேட்பதிலெல்லாம் கூட காதலும் மயக்கமுமே விஞ்சி நிற்கும்.

புத்தகக் குவியலில் அப்படி இல்லை. குருவைப் பார்த்த சந்தோஷம், தகப்பனைக் கண்ட பரபரப்பு, நண்பர்களைச் சந்தித்த குதியல், அம்மாவின் ஒரு நிராகரிக்கவியலாத வார்த்தை, மனைவியின் ஒரு ரஹசிய ஆணை, குழந்தையின் ஆவல் ஆனந்தம் என அனேகமாய் அனைத்து உறவுகள் தரும் மகிழ்ச்சியும் ஒரே இடத்தில் கூடிவிடுகிறது, ஒரு திருமண நிகழ்வின்
 கலவையான சப்தங்கள் சுவைகள் உணர்வுகள் போல.

இந்த வருடம் தான் லபித்தது. வாரயிறுதிகள், பண்டிகைக்கால விடுமுறைகளற்ற ஒரு தினமே சரியாக இருக்கும் என எண்ணினேன். நீளக்குச்சி ஐஸ், அகன்று விரிந்த அப்பளம், கோல நோட்டு, சமையல் குறிப்பு, தாம்பத்தியம் என்ற பெரும்பான்மை வாசகக் கூட்டம் வடிந்து விடும் என்பதும், எல்லோருக்கும் கால அவகாசங்கள் இருக்கிற விடுமுறை தினங்களில் தான் மேடைகளிலும் வகுப்புகளிலுமாய் படைப்பாற்றலின் தேவை அதிகமிருக்கும் என்பதும் காரணங்கள். நண்பர்கள் கிரி, கோகுல் எல்லோரும் எப்போது அழைத்தாலும் அன்போடு அழைத்துச் செல்லவும் விழைந்தனர்.  

ஞாயிறன்று (20-1-13) சொக்கன் வருவதால் ஒரு சந்திப்பும் வைத்துக்கொள்ளலாமென பேச்சும் இருந்தது. அன்று அகாதமி பாடங்களை முடித்து கண்காட்சிக்கு வந்தேன். கண்ணே தெரியவில்லை என்றாலும் அவ்விடத்தை விட்டு தொலைந்து போக இயலாதவாறு பின் தொடரும் நிழலின் குரல் போல பின் தொடரும் கூவத்தின் சுழல் நல்லதொரு
 
நாசியடைப்பானாகி வளாகத்தின் எல்லைகளை வறையறுத்துக் கொண்டிருந்தது. ரங்கநாதன் சாலை போன்ற கூட்டம். சற்று நேரம் வெளியே இருந்து அவதானித்து, கூட வந்திருந்த கிரிதரனை மட்டும் உள்ளே போய் அமர்க்களப்படுத்து என்று வாழ்த்தி விடைபெற்றேன். சக்கர நாற்காலியால் அத்தனை பேரின் கணுக்கால்களையும் இடிக்க மனமில்லை. அதோடு, ஒரு வீல்ச்சேர் நிற்கும் இடத்தில் நால்வர் நிற்கலாம்.
கண்காட்சி மறுநாள் முடிவடையும் நிலையில் செவ்வாயன்று போனால் பல புத்தகங்கள் இருக்காது, சில கடைகளையே மூடிவிடுவார்கள் என்றெல்லாம் வேகமாய் உடைக்கும் ஒரு பதிவர் இன்னொரு வருடாந்திரத் தேரிடம் சொன்னதாகச் செவிவழிச் செய்தியும் வந்தது. இல்லையில்லை, காணும்பொங்கல் கூட்டங்களெல்லாம் கடற்கரை, லட்டு, வண்டலூர், மாமல் என்று போய்விட்டதால் ஸ்டால்களில் நல்ல நீள அகலங்கள் உணரப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டை வாங்கியதும் ஒரு அரங்கத்தின் நுழைவுக்கட்டணம் உள்ளே விற்கப்படும் தேநீரின் விலையாவது இருக்கவேண்டும் என்று எண்ணினேன். பத்து ரூபாயாவது வைத்திருக்கலாம். பார்க்கிங் என்பது பெரிய மண்டைக்குடைச்சலாக இருந்ததாக அருண் சொன்னான். விட்டுச் சென்ற எந்த வண்டியையும் எடுக்கமுடியாமல் இப்படி இருந்ததாம். 
                                                                     
கண்காட்சிக்கான தளம் என்பது சமூஹத்தின் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலித்துக்

கொண்டிருந்ததோடு, பல இடங்களில் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமக்காக ஆசையுடன் பறித்து வைக்கும் குழிகள் போல எதிர்பாரா இடங்களில் உள்ளே சென்றது. எங்கும் தடிமனான கேபிள்கள் நீண்ட பாம்புகளாய் மறிக்க தட்டுத் தடுமாறி என்றால் என்ன பொருள் என்பதற்கு ஒரு நமக்கு நாமே லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் நடந்துகொண்டேயிருந்தது. கிழக்கு, உயிர்மைகாலச்சுவடு, விகடன் என்று முன்முடிவு செய்த பதிப்பகங்கள் நுழைவாயிலில் கடந்ததும் மறந்து போய், எல்லா அரங்குகளையும் பிறகு பிறகு என்று மனதில் குறித்தவாறு பார்த்துக்கொண்டே வந்தேன். 

எல்லா அரங்குகளிலும் ஒரு வீல்ச்சேர் நுழையும் அளவு இடமில்லை, அல்லது ஒரு பக்கம் நுழைந்தால் மறுபக்கம் வர முடியாமல் குறுகியிருந்தன. 
மூலைகளில் கார்ப்பெட்டைக் கைகளால் அமுக்கிப்பார்த்தே திரும்ப வேண்டியிருந்தது. அதற்கே கிழக்கின் உள்ளே ஒரு சக்கரம் மாட்டிக்கொண்டது. சில அரங்குகள் தவிர பெரும்பான்மையானவற்றில் நிறைய அலமாரிகளில் நின்றால் தான் தெரியும் வகையில் புத்தகங்களைப் பல மஹானு’பாவர்’கள் படுக்க வைத்திருந்ததனால், ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கண்ணில் பட்டவற்றில் மட்டும் தேடினேன். பல இடங்களில் வாயிலில் இருந்தபடி தரிசன ப்ராப்தி மட்டுமே.

மனுஷ்யபுத்திரன் படபடப்பாக எதிரில் வந்தார். கை குலுக்கிவிட்டு மேலே ஏதும் பேசி, கேட்டு அவரைத் தொந்தரவு செய்யாமல் விடை பெற்றேன். ஹிண்டுவின் கேசவ் வெங்கடராகவன் அண்ணாவையும் சந்தித்தேன். சில்பியின் தொகுப்பை வாங்கிவிட்டதாகச் சொன்னார்.

நான்கு பாதைகளுக்கு ஒன்று என்றேனும் வயதானவர்கள் அமர டீக்கடை பெஞ்ச்சாவது போட்டிருக்கலாம். நிறைய பேர் கீழேயே அமர்ந்துவிட்டார்கள். நாங்கள் (நான்-அக்கா–அருண்) அப்படி ஒரு ஓரம் அமர்ந்தபோது (எனக்கென்ன, அட்டாச்ட் நாப்கின் போல அட்டாச்ட் நாற்காலி) சன் நியூஸ் சேனலில் இருந்து ஊனமுற்றோருக்கான அணுகும் வசதி, கழிவறை ஏற்பாடுகள் பற்றிக் கேட்டார்கள். சொன்னேன், இந்த அளவிற்கு செய்திருக்கிறார்கள், இனி வரும் காலங்களில் இதை மேம்படுத்தவேண்டும் என்பதையும் சேர்த்து.

வாங்கியவை:

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக 
- தியடோர் பாஸ்கரன்

2. குமரிக்கண்டமா சுமேரியமா 
- பா.பிரபாகரன்

3. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் 
& ஏழாம் உலகம் - ஜெயமோகன்

4.
ஏன் இந்த உலைவெறி - ஞாநி

5.
ஆயிரத்தில் இருவர், மாயா & மலை மாளிகை - சுஜாதா

6.
ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்

7.
ஜனவரி மாத உயிர்மை.


 கிருஷ்ணா சுஜாதாவின் கதைகள் வாங்கினான். அருண்குமாருக்கு அங்கிருந்த ‘மறுபிறப்பின் இரகசியமும் (சியங்கள் இல்லையா?) ஆவிகள் செய்யும் அற்புதங்களும்’ என்ற புத்தகத்தைக் காட்டி, 
’டேய்.. அத அம்மா கிட்ட காட்டு’
 
‘அம்மா இங்க பாரு…’
‘ச்சீ வெய் அத.. மெண்டலாயிடப்போற’ 

குழந்தைகளுக்காகச் சில புத்தகங்கள்,
 P.G.Wodehouse, Jathaka Stories, Perfect questions and perfect answers, அம்மாவுக்காக தேவி பாகவதம் மூன்று பாகங்கள் ஆதி சங்கரரின் கட் அவுட் இரண்டும் வாங்கினேன். சரஸ்வதி – ஒரு நதியின் மறைவை கிரிதரன் வாங்கினான். சுமேரியாவைக் கொடுத்து சரஸ்வதியைப் படித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். (இரா.முருகன்) விஸ்வரூபம், விஷ்ணுபுரம், உடையும் இந்தியா இன்னும் பலவும் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு. பாரா, சொக்கன் மற்றும் பிற நண்பர்கள் எழுதியவை எல்லாம் Dial for Books-ல் வாங்கிக்கொள்ளலாம் என உத்தேசம். தியோடர் பாஸ்கரனின் இரண்டு அத்தியாயங்களும், ஏழாம் உலகத்தை ஒன்பது அத்தியாயங்களும் படித்தாகிவிட்டது.

புத்தகங்களுக்காகச் செலவு செய்தலையோ, வாங்கிய நூல்களை பேணுதலையோ ஒரு தகுதியாகக் கொண்டால் நானெல்லாம் வலைப்பதிவென்ன,
 #NowReading என்று hash tag கூடப் போடமுடியாது. 
தீவிர வாசிப்பில் இருக்கும் ஆர்வத்தின் அதே அளவு வாசிப்பில் சலிப்பும் இருக்கிறது. எனினும், வாங்கிப் பரப்பிய பட்டாசுக் குவியலை விதவிதமாக அடுக்கி, கைக்கொண்டு மகிழ்வதைப்போல, சுற்றிவந்து பார்த்துச் சில நூல்களையேனும் வாங்கவேண்டும் என்று சில வருடங்களாகவே கணன்று வந்த ஆவல் இவ்வருடம் பூர்த்தியானது. எரிகிற நெருப்பில் நெய் வார்த்து என்றைக்கு அணைப்பது, வருடா வருடம் ஜ்யோதி தான்.