Monday, June 29, 2015

Kodumudi in Texas






முடிவெட்டிண்டதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலயா என்ற ஆழ்மனத்தின் குரலோசை Alt+2 (NHM) அழுத்தும்போதே கேட்கத்தான் செய்தது. ஆனால் சலூன் என்கிற ஆணுலகை, சிறுவயதின் மிஷின் கட்டிங் அச்சங்களை, பதின்பருவ ஞாயிறுகளை இரு மாதத்திற்கொருமுறை கிளர்ச்சியாக்கவென்றே காற்றில் படபடத்த காலண்டர் (பிரித்துப்படித்து இன்புறவேண்டாம்) பக்கங்களை, படிக்கவேண்டிய செய்தித்தாள்களும் புத்தகங்களும் நுரை துடைக்கவும் நடுப்பக்கம் பார்க்கவும் மட்டும் பயனுறும் விந்தையை, பையனை அமரவைத்து ‘ஒட்ட வெட்டி வெச்சுரு.. இந்தா வாரேன்’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் விரையும் அப்பாக்களை எல்லாம் பிரிந்து, கத்திரி சப்தம் காதில் விழும்போதே கண்ணாடியில் முகம் தெரிந்து இருபது வருஷங்கள் ஆகிவிட்டதால் ’எழுதேன், பரவாயில்ல’ என்று அமெரிக்க அபார்ட்மெண்ட் சுவரான ப்ளைவுட்டில் என் முதுகை நானே மூன்று முறை இடித்துக்கொண்டேன், தட்டிக்கொடுக்க அருகில் யாருமில்லாததால்.

ஈரோட்டில் இருந்தவரை, அண்ணா தூக்கிச்சென்று விடுவான்; +2 படிப்பு வரை பள்ளிக்குச் சென்றதும் அப்படித்தான். 89 ஆகஸ்ட் இறுதியில் சென்னை திரு.வி.க.நகர் வந்ததும் முடிவெட்டிக்கொள்ளுதல் கடின கார்யங்களில் ஒன்றாயிற்று. கண்ணாடிக் கதவுகளில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டி,
‘இங்கெல்லாம் நாப்பது ரூபா கேப்பான்’ நடைபாதை ஏறி, படிக்கட்டுகள் தாண்டி உள்ளே சென்று சிந்திக்கிடக்கும் முடிக்குவியல்கள மிதித்துக் கடந்து உயரமான சுழல் நாற்காலிகளில் ஏறி அமரும் வித்தை ஏதும் கைவரப்பெற்றிருக்கவில்லை எனக்கு. எனவே, முக்கிய சாலைகளில் இல்லாமல் சந்துகளில் இருக்கும் முதியவர்களின் கடைகளில் நண்பர்களோ அண்ணாவோ ஃப்ரீயாக இருக்கும் பொழுது தலைக்கனம் குறைத்துவிடுவேன். பிறகு சில நாட்கள் எளிமையான வாழ்க்கை. இரு மாதங்களில் மீண்டும் செருக்கு சேர்ந்துவிடும். எப்போதும் வெட்டிவிடும் வேலு திடீரென உடல்நலக்குறைவால் இறந்துபோனார். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர் மகன் பாரம் சுமக்கலானான். மாதமொருமுறை முடிவெட்டிக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன்.

சென்னையில் எப்படியேனும் மாம்பலம் தி.நகர் அல்லது மைலாப்பூரில் குடியிருக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. வீட்டுவாடகை ஏற்றங்களினால் அவ்வாசையைச் செயல்படுத்த எண்ணி ஆனால் சக்கரவியூகத்துக்குள் புகவியலாது சக்கரத்தின் ஓரமாக நகர்ந்து திரு.வி.க.நகர், கொளத்தூர் என்றிருந்த ஜாகை, வளசரவாக்கத்திலிருந்து வாள்வீசத் தொடங்கியது. அங்கு தான் முதன்முதலில் வீட்டின் பின்புறம் இருந்த குறுகலான இடைவெளியில், ‘முடி தான.. பரவாயில்ல பார்பர வரச்சொல்றேன் இங்கயே வெட்டிக்கோங்க, அப்புறம் பெருக்கிடலாம்’ என்று அன்பாய் உரைத்தார் வீட்டுக்காரர். அதன் பின்பு திரைப்படங்களில் பார்த்தது தான் சலூன். முடிவெட்ட வந்தவர் நாதஸ்வரமும் நன்றாக வாசிப்பார். எனவே சில பாடல்கள், ராகங்கள் என்று ஸ்வாரஸ்யமாய்ப் போனது பொழுது. ஆனால் பாட்டிலில் இருந்து காதுகள் சிலிர்க்கப் படரும் தண்ணீர், முகமும் பின்னந்தலையும் பார்க்க முடிகிற பெரிய கண்ணாடிகள், வேறு மனிதர்கள், என்றைக்கு எந்தப் படம் ரிலீஸ் என்று பேசுகிற தினசரிகள் எதுவுமற்று கடைசியாய் ஒருமுறை மட்டும் கையிலேந்திய சிற்றாடியில் முகம் பார்த்து, ‘இப்ப மூஞ்சி நல்ல்ல்லா இருக்கு பாருங்க’ சரியாகத்தான் இருக்கிறது என்று குளிக்கச்சென்றுவிடும் மகத்தான மனிதனானேன். சஹ மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டவன் மஹத்தானவனாகத்தானே இருக்கவேண்டும்.

கி.பி.  இரண்டாயிரத்தொண்ணில் மன்மத ஆண்டு (காமன் எரா) வியூகம் துளைத்துத் தி.நகர் மங்கேஷ் தெருவில் குடிபுகும் பாக்கியம் ஏற்பட்டது. அங்கு வடிவேல்.

‘வீட்டுக்கெல்லாம் வந்து வெட்ட மாட்டேன் சார்’

பணம் எக்ஸ்ட்ராவா தரேம்ப்பா

வாணாம் சார், கடய வுட்டுட்டு வந்துகினு பேஜாரு..

ஏம்ப்பா.. யாராவது வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா செய்யமாட்டியா. அது மாதிரி வெச்சுக்கோயேன்.

அது ஒரு தபா தான் சார். இது மாசாமாசம் தபாக்குதபா வரணுமே, கடய வுட்டுட்டு.

சரி பரவாயில்ல. உன்னப் பாத்தா நாலாம் நம்பர்ல பொறந்தா மாதிரி இருக்கு. ஆனா, ஒத்து வல்லியே..

ஸ்ஸார்! நாலாந்தேதி தான் பொறந்தேன் ஸ்ஸார்!! ஒங்க்ளுக்கு அதெல்லாம் தெரியுமா ஸ்ஸார்?

எல்லாம் நான் சொல்றேன், வா.

பிறகு வெஸ்ட் மாம்பலம் - சைதாப்பேட்டை - அஷோக் நகர் மூன்றும் சந்திக்கும் குழப்பமான நிலப்பரப்பிற்கு மாறும் வரை வடிவேல் நான்கு வருடங்கள் தொண்டாற்றினான்.


சென்னையின் பகுதிகளிலெல்லாம் கச்சேரி வாசிக்கவோ, கேட்கவோ, ஊர் சுற்றவோ அலையும் போதெல்லாம் எந்தக் கடையில் சாலை விளிம்பருகிலேயே தொலைபேசி இருக்கிறதென்று பார்க்கும் பழக்கமிருந்தது எனக்கு. செல்ஃபோன்கள் இல்லாத காலங்களில் அத்தியாவசிய சூழல்களில் வீட்டையோ நண்பர்களையோ அழைக்கவேண்டி கண்கள் குறிப்பெடுத்துக்கொண்ட காலம் அது. அக்னி நக்ஷத்திரம் படத்தில் ஜன்னலின் கண்ணாடியொன்றின் சில்லு பெயர்ந்து விழும் ஒரு காட்சிக்குக் குறியீடு ஏதுமில்லை, சும்மா தான் என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல சலூன், துணிக்கடை, உணவகங்களின் மீது அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும் ஒரு கண் இருந்தது எனக்கு.  இத்தனை மால்கள் வீல்ச்சேர் ஆக்ஸசுடன் வரும் வரை ஷாப்பிங்கில் எனக்குப் பெரும் ஆர்வம் இருப்பதை அறியாமலேயே தான் இருந்தேன்; அல்லது காஞ்ச மாடு கம்புல புகுந்தாற்போல ஒன்றாகவும் அது இருக்கலாம். அதுவரை படிக்கட்டுகள் இருந்த இடத்திற்கு ஒரு சாய்வுப்பாதை போடப்பட்டதும் அங்க ஒருநாள் போகணும் என்ற எண்ணம் வரிக்கப்பட்டுவிடுகிறது மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா என்று ஸங்கல்பிக்காதபோதும், சல்லடை மனத்தில்.

2005-ல் (அங்கல்லாம் எப்டி சார் வெட்டிப்ப - வடிவேல்) மிஷிகன் வந்தபோது, ’வாங்கோ க்ரேட் க்ளிப்ஸ்க்கு அழைச்சுண்டு போறேன், ரொம்ப ஓஹோன்னு எல்லாம் நாம சொல்றபடி வெட்டமாட்டான், ஆனா தேவல’ என்று சொன்னதை மறுத்து, ‘இல்லல்ல.. ஊருக்குப் போயே வெட்டிக்கறேன். அதான் வரபோதே ஒண்ட வெட்டிண்டு வந்துட்டேனே’ என்று சொல்லி, ஆறுமாத மகசூலை மதராஸப் பட்டினம் அடைந்தபின்னரே அள்ளினேன். பிறகு, பல பயணங்கள் அதே போல் அந்நிய நிலத்தின் கத்திபடாமல் இதுவும் கடந்து போகுமென்று போனது.

இம்முறை க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைக்காக விமானமேறுவதற்கு இரு தினங்களுக்கு முன் வியாழனுக்கும் ஞாயிறுக்கும் திதி தோஷமில்லை என்று தலையைக் கொடுத்ததில், சகட்டுமேனிக்கு தாத்தா விளையாடிவிட, சீப்பிலிருக்கும் பற்களைவிடக் குறைவான முடிகளே கூடுவாஞ்சேரிக்கு மிக அருகில் நிலம் போலக் குழுமியிருந்ததை உணர்ந்துகொண்டேன். ஃபேஸ்புக்கின் ப்ரொஃபைல் படங்கள், கச்சேரி ஃபோட்டோஸ் எல்லாம் டாலடிப்பதை நிறுத்த இரு மாதங்களாயின. வாஷிங்டன், க்ளீவ்லேண்ட், சேக்ரமெண்ட்டோ, க்யூப்பர்ட்டினோ, ஒமஹா என்று ஸ்வாமிகள் முகாம் போல மாறிமாறி இப்போது ஹ்யூஸ்டனில் இருக்கிறேன். இரண்டு நாட்களாக தலையில் எந்நேரமும் ஒரு பூனை அமர்ந்திருக்கும் உணர்வு. ’அடி மாங்கொளத்துக் கரை மேல... ஏ ஏஏ.... மயிருணத்தும் சின்னவளே ஏ.. மயிருணத்தும் சின்னவளே’, என்று எவரேனும் எசப்பாட்டு படித்துவிடும் அபாயம் அச்சுறுத்த, 90•F உஷ்ணம் ’K7 அல்ல நீ - .கேடிந்த oven’ என்று பாடியபடி நிலவெப்பமயமாதலுக்கு என் கழுத்திலிருந்து கான்ட்ரிப்யூஷன் எதற்கென்று Great Clips- ஐ கூகிளினேன்.

$20, 30 என்றெல்லாம் அதிர்ச்சியளித்த கடைகளை விடுத்து,

'அந்த ஹில்க்ராஃப்ட் போற வழில ஆறு டாலர்னு ஒருத்தன் போட்ருந்தானே, அங்க போலாம்’

“சார் அப்படியெல்லாம் யாரவேணா நம்ம்ம்பி ஒங்க தலையக் குடுத்துராதீங்கோ’

‘பரவால்ல போலாம் வா. முடி தான. கோணாமாணையா வெட்டினான்னா, வளந்தா சரியாப்போறது’





எல்டர்ஸ் ரிட்ஜ் சாலையில் வியட்நாமிஸ் நூடில்ஸ் கிச்சனின் அருகிலிருந்தது L&Y Salon. காரிலிருந்து இறங்கி வீல்ச்சேரில் எளிதாய் உள்ளே சென்றேன். அங்கிருந்த போஸ்டரில் ஐம்பது தலைகள் என்னைப் பார்த்து இதில் எந்தத்தலை உன்னுடையதாக ஆகப்போகிறதெனச் சிரித்தன. சுழல் நாற்காலியின் உயரத்தை எனக்கு வாகாக இறக்கி, மாறி அமர்ந்ததும் எப்படி என்ன விதமாய் வெட்டவேண்டும் எனப் பொறுமையாகக் கேட்டு, செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் நிதானமாய்ச் செய்தார் அக்கலைஞர்.

இருபது வருடங்களுக்குப் பின் என் பின்னந்தலையைப் பார்த்தேன். பின்னங்கால் பிடரியில் பட ஓடியதேயில்லையாதலால் அடிகளேதுமின்றி எவரும் ரிட்வீட் செய்யாத உள்குத்துகளற்ற கீச்சு போல் 140-க்குள் இருந்தன எஞ்சியிருந்த முடிகள். வம்புகள் பேசாது திரைச்சுவை, வண்ணத்திரை, குமு-குங்கு-ஆவிகள், அந்தரங்கம் பகுதிக்கு கடிதங்கள் நிரம்பிய அந்த மாதிரிப் புத்தகங்கள் இல்லாமல் எம்மா வாட்சனின் ப்ளோ-அப் கூட இல்லாத வெற்றுச் சுவர்கள் சூழ்ந்திருக்க, Mr.Bean-ல் வருவது போல ஒரு பெரிய கண்ணாடியைத் தலைக்குப் பின்னே பிடித்துக் காட்டி, திருத்தங்களை இன்முகமாய் ஏற்று பத்து டாலர்கள் மட்டும் வாங்கிகொண்டு சிரித்தபடி வழியனுப்பினார். யூ விசிட்? வியட்னம் ஆல்சோ ஹாட் லைக் இண்டியா என்று அவர் மனைவி சொன்னதை ஆமோதித்தேன். இந்தியாவும் வியட்நாமும் என்பதை உடனே ’we at - நாமும்’ என இருமொழிகளில் எழுதிப்பார்த்தது மனம்.





’யூ வாண்ட் திஸ் ஸ்ப்ரே?

“எத்தையானும் தெளிச்சு விட்ராதப்பா மகராசா’ என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குக் கேட்காத வண்ணமாய் எண்ணியபடி, நோ நோ.. ஐ ஹவ் ஹேர் செட்டிங் ஜெல்’ என்று புளுகிவிட்டுக் கிளம்பினேன்.

அஃதல்ல விஷயம். ஊனமுற்றவர்கள் அவர்களால் செய்ய முடியாததைச் செய்ய இயலும்போதோ, சமூகமோ அரசோ அதற்குரிய வசதி வாய்ப்புகளைத் தரும்போதோ அடைகின்ற திருப்தி ஞாலத்தின் மாணப்பெரிது. அம்மா உணவகம், குடிநீர் எல்லாம் அளிக்கப்படும் இக்காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வழிபாட்டுத் தலங்கள், பூங்கா, நதி-கடற்கரை, திரையரங்கம், துணிக்கடை என்று சில இடங்களேனும் எனக்கு வேண்டியதை நானே தேர்ந்தெடுத்தேன் என்ற நிறைவைத் தருமாறு அமைவது அவசியம். இப்போதைக்கு பள்ளிகளில் கூட அல்ல, மயானங்களுக்கு மட்டுமே இருக்கிறது சக்கர நாற்காலிகளுக்கும் அதை உபயோகிப்பவர்களுக்குமான சாவுப்பாதை.


Wednesday, April 29, 2015

Miss you even when you be with me - படக்கதை











இது ஒரு... இல்ல, ஆறு படக்கதை. படங்கள ஏன் இப்பிடி... இல்ல, ஒண்ணும் சொல்லல. புரியாதவங்க கீழ படிச்சுக்குங்க. 















என்ன பண்ற?
......

என்ன பண்றன்னு கேட்டேன்

ச்சு.. ஒண்ணுமில்ல

ஒண்ணுமில்லன்னா

சும்மா இருக்கேன்

ஏன் சும்மா இருக்க?என்ன மிஸ் பண்ணலியா

 
வெட்டியா இருக்கும் போது ஒன்ன மிஸ் பண்ணா பரவாயில்லயா

 
ஏன்?

அப்ப, வேலையா இருக்கும்போது உன்ன மிஸ் பண்ணலன்னு ஆயிடுமே

அப்பவும் பண்ணு, சும்மா இருக்கும் போதும் பண்ணு..

ஏன்...

நீ என்ன எப்பவும் மிஸ் பண்ணிகிட்டே இருக்கணும்

இருந்தா..

இருந்தா... அது சந்தோஷம்

அதுல என்ன சந்தோஷம்

அளவு எல்லாம் சொல்லாம, சொல்லவே முடியாத அளவுக்கு நீ என் மேல பிரியமா இருக்கேன்னு..

மிஸ் பண்ணனும்னா நீ இல்லாம இருக்கணும். அப்ப என்ன பண்ணட்டும். ஒனக்குபிரியமா இருக்கணுமா பிரியாம இருக்கணுமா

போடா.. எதாவது சொல்லி என்ன மயக்கற

நான் ஒண்ணும் ஒன்ன மயக்கல, மேடம் இப்ப மயங்கற மூடுல இருக்கீங்க

......
ம்ம்....

......................... :)

ஆமா.. இருக்கேன்... தெரியுதா..

தெரிஞ்சு தான சொல்றேன்

அப்புறம் ஏன் அங்க இருக்க

மிஸ் பண்ணணுமே..

வேணாம் மொத எழுத்த மாத்திக்கலாம்

..............

..........................................................

...................

மண்டு
... யு நோ வாட்?

இப்ப பேசாத..

பேசுவேன்.. யு நோ வாட்?

ஸ்... ஸ்ஸொல்லு...

I miss you even when I be with you

..
ம்ம்..சரி... தெரியுதா, நீ தான் இப்படி எதாவது சொல்லி மயக்கறன்னு

........
ம்ம்.......

.. இரு..

முடியாது பேசாதன்னு நீ தான சொன்ன

இல்ல பேசலாம்

ம்ஹூம்...

இத சொல்லு...

என்......

அது எப்பிடி நான் இருந்தாலும் என்ன மிஸ் பண்ணுவ?

நேத்து நம்ப என்ன பண்ணினோம்?

ம்முவ்வா.. சொல்ல மாட்டேன் போ..                               

சொல்லுடி..

இப்ப எதுக்கு பேச்ச மாத்தற, சொல்லு எப்பிடி நான் இருந்தாலும் என்ன யு வில் மிஸ் மீ?

அதான் சொல்றேன், சொல்லு நாம என்ன பண்ணினோம்

சினிமாக்குப் போனோம்... ... ம்மெதுவா.. வெளில சாப்பிட்டோம்..

அப்புறம்..

வீட்டுக்கு வந்தோம்

வந்து...?

<3 <3 <3

என்ன பேசினோம்?

எங்க பேசினோம்..

பேசவேயில்லல்ல.. அதான். உன் கூட இருக்கும் போதே உன்ன மிஸ் பண்றது.

என்ன ஒளர்ற.. ஒண்ணும் புரில

புரிலயா, நான் ஒளர்றனா?

சரி. புரில.

இப்ப உன் கூட இருக்கேன்; உன்னோட தான் இருக்கேன். ஆனா, நேத்துப் பேசாம இருந்த ஒன்ன மிஸ் பண்றேன்.. புரியுதா?

....
     .......

            .
            .
            .
            .
            .

         டேய்.



  

Friday, February 13, 2015

முடிவுறாத் தியரம்



இணையத்-தொடல்"


அருகில் இருந்தால் மட்டுமா..
'நினை விட்டுவிட்டுப்
பல லீலைகள் செய்து - நின்
மேனி தனை விடலின்றி'?

நினை அழைத்து அழைத்துப் பல
கதைகளும் பேசி - நின்
"இணையத்-தொடல்" விடலின்றி...

படித்துத் தான் பாரேன் - நேற்று

பேசிக்கொண்ட மின்பேச்சுகள்
மொத்தமும்..


கூடிக் களித்த இரண்டாயிரத்து
நானூற்று அறுபத்தி ஆறு வரிகளையும்
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்,


நூறுக்கு மேல் தேறவில்லை
சரி, கெளம்பறேன்... இரு...
என்றவற்றை விடுத்து.

-----------------------------------------------------------------------------

உன் பெயர் தான் அதற்கும்


படுக்கையில் விழுந்ததும் 
அசதியை அறியும் - ஆயினும்
எண்ணாமல் மூடுவதில்லை 
இமைகள் 

எண்ணல் என்றது 
உன்னை மட்டுமல்ல 
சுற்றிலும் இரைந்த 
தலையணைகளையும் தான். 

எத்தனை நிறங்கள் எத்தனை மென்மை 

அன்று நீ என்ன நிறம் 
அணிந்திருந்தாய் அப்போது... 
அஃதொன்றே ஆடிடும் 
அறையெங்கும் நிறைந்து 

அந்நிறத்தில் ஆடை கொண்ட 
மென் தரத்தில் அணை தேடி 
என்னருகில் அமர்த்தியதும் 
என்னவாகும் நீ சொல்...

அன்று உய்யும் 
அஹம் கொள்ளும் 
அதற்குப் பெயராய் 
அழகி உன்னை சூட்டியதால்.

-----------------------------------------------------------------------------

சேமித்துக்கொண்டதற்கு


ஒரு தலையணை
கை பேசியின் முனை
சாய்ந்து நின்ற சுவர்
தேநீர்க் கோப்பை

வார இதழின் ஏதோ ஒரு பக்கம் 
சிறு கரண்டி ஒன்றின் பாதி உள்ளிருப்பு
காகிதங்கள் விலகிய மேஜை
மீசையை ஒதுக்கிய ஒரு விரல்

ஒரு கைக்குட்டை 
செலுத்துமுன் கிலுங்கியதோர் சாவி 
கையெழுத்திடவேண்டி
சட்டை துறந்த பேனா

புதியதாய் திறந்த கோப்பு 
மேலாளரின் மேசையில் நின்றிருந்த ஒரு பறவை
பாத்திரத்தை திறந்த பின்னும்
கீழே வைக்காத மூடி 

பிற்பகல் கலக்கத்தில்
வாய் மூடிய புறங்கை 
தூக்கிப்போடுமுன் விரலிடை தேங்கிய
மிட்டாய்க் காகிதம்
வீடடைந்ததும் சிரித்த 
பக்கத்து வீட்டுக் குழந்தை 
எதிர்பார்த்து தரையில் கிடந்த
அஞ்சல் உறை 

காய்ந்துவிட்டது என மடிக்கப்பட்ட
துணிகளில் ஒன்றிரண்டு 
இரவு உணவுக்குப் பின்
அருந்தாமல் 
பிடித்திருந்த தண்ணீர்க் குவளை

கை பேசியின் முனை
ஒரு தலையணை...

எப்படிச் செய்வாய் கைம்மாறு ஏதும் 
தொகுக்கப்பட்ட இத்தனைக்கும்,
தொட்டுயிர்த்த அத்தனைக்கும் 

உனக்கான என் முத்தங்களை 
சேமித்துக்கொண்டதற்கும்
சேர்தலில் தள்ளியதற்கும்.

--------------------------------------------------------------------------

முடிவுறாத் தியரம்


முற்பகல் ஆன பின்னும் 
முன் விரல் வீற்றிருக்கும்
முன்னிரவுக் கூடலின்
முன்-வந்த வாசனை

நெடிதுயர்ந்தும் தீண்டாது
எத்துணை எரிந்தும் 
பொங்கிடாது 
ஆறியும் ஆர்ப்பரித்தும் 
அடங்கினார்ப்போல் 
அறிவை மயக்கியும்

முற்றிலும் தீர்க்கவியலா
முடிவுறாத் தியரமாய் 
சிக்கலான கணக்குகளுடன் 
சிந்திக்க ஏதுமின்றி

விரல் நுனியில் தேங்கி நிற்கும்
தனிமையின் வாசனை. 

--------------------------------------------------------------------

கீழுதடு 


மௌனத்தில் சேர்ந்திருக்கலாம் என்று 
என் கீழுதட்டிற்கு வைத்துவிட்டேன்
உன் பெயரை, 
தலையணைகளுக்கு 
சூட்டிச்சூட்டி சலித்தே போனதாலும்.

மேல் தாடை அசையாதாம்; 
கீழ் தாடை தான் 
வந்து வந்து சேருமாம்.

கரை மோதும் அலை போல
பரவியே அணைக்கிறாய், 
பிரியும்போது கரைக்கிறாய். 

வாசல்வரை கூட வரும்
வழியனுப்புதலின்
வருடல் வேண்டி


மீறவே செய்கிறேன்
Constitution-னின் கட்டுப்பாடுகளை
நுரைத்துச் செல்லும் அலை பின்னே
கரைந்து செல்லும் மணல் போல
நானும்.

----------------------------------------------------------------------------

ஏதுமில்லை


தலை உதறித் தவிர்க்கும் வரை
தயை கொள்ளாது காமம்
பிடித்திழுக்கும்; பீடித்து நிற்கும் 
தப்பிக்க ஒரே வழி
தாண்டிவிடல்.

தரையிருக்கும் தப்படிகள் 
தருவதில்லை கலக்கங்கள்
உயர்ந்திருக்க உளமஞ்சும் 
உயிர் பயத்தில் சிற்றடிகள் 

முங்கலாம் - சற்றே
மூக்கினுள்ளும் செல்லலாம்
மூழ்கிவிட்டால் உயிரேது
மூவுலகிற்கும் அது உடம்பு.

உடலாய்க் காமம் கொள்ள
மனக் கரகம் சாய்கிறது
சாய்ந்துவிட்ட மனம் பற்றி
சார்த்திய கோல் நிமிர்கிறது 
சாகாது மீண்டும் மீண்டும்
தணிதலுக்காய் தவிக்கிறது.

எத்தனை கொன்றாலும்
எழுந்திருக்கும் மாயம் நீக்கக்
கொல்வதை நிறுத்தினேன்
சாவுமில்லை;பிறப்புமில்லை.  

Wednesday, January 14, 2015

தாமரைமலர் அணி பரமனே வா


ஹரிகேசநல்லூர் ஸ்ரீ முத்தையா பாகவதர் இயற்றி வழங்கி, மதுரை ஸ்ரீ மணி ஐயர் அவர்களால் மிகவும் ப்ரபலமடைந்த இங்க்லிஷ் நோட் எனும் ஸ்வரக்கோவை கேட்டிருப்பீர்கள். உமையாள்புரம் சிவராமன் சார் என்னை அதற்கு 
ஸாஹித்யம் எழுதுமாறு சொன்னார். அது இம்மாதம் ஸ்ரீ க்ருஷ்ணகான சபாவில் Athmaa Speaks எனும் நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குறைகளை மன்னிக்கவேண்டும்.


English Note:  Listen to audio in Soundcloud 
                     
தேனெனவரும்
 தெள்ளமுதே வா

நீ அருள்புரி ,,தம்,   நானிலம் ,கி,ழட்,டும்,

தேனெனவரும் தெள்ளமுதமே வா
நீ அருள்புரி ஸததம்  நானிலம் மகிழட்,டும்,

தேனெனவரும் தெளியமுதமே வா

நீ,,,, ,  மலையில் கை     லாஸ சிகரத்தில்
நீ, கண், னே   ஸ்ரீ, சிதம்பர நடராஜனே
மஹேஸா -  உனை உணர்ந்து
அத்வைத ஆனந்தம் சித்திக்க ஈசனே சரண,டைந்தேன் ஸர்வேஸா – நினை சரணடைந்தேன் ஸர்வேஸா

தாமரைமலர்
 அணி பரமனே வா – செந்
தாமரைமலர் அணி பரமனே வா

நீ வருகையில் நிலம் குளிர்ந்தது வான் பொழிந்தது 
வளம் செழித்தது தாமரைமலர் அணி பரமனே வா

மா….னொரு மழுவும் கை யே,,,,ந்தி டமருகமும் 
சூலம் வன்புலித் தோலும் அசைத்து
குமரன்தன்
 தந்தையே வா   கனி வென்றிட்ட 
மோதக ஹஸ்த   ஸாமர கர்ண கண தி,  யுனேவா,,   - கனிகழைநுகர் கண தி,  யுனேவா,,  

அன்னை
 உமையும் அருகில் இருக்க 
கஜமுகனுடன் குஹனும் திகழ
நந்தி த்வனிக்கும் நாதங்களில் - தரிதகஜம் கிடதகணம் 
என நடனம்புரிவாயே

முனிபுங்கவரும்..
 ஜய ஸங்கரரும்.. தினம் நினைந்தவரும்.. 
தலை வணங்கிவரும்

முனிபுங்கவரும் -
 மாமுனி ஸங்கரரும் – அனுதினம் நினைந்தவரும்… தலை வணங்கிவரும்

முனிபுங்கவரும் மஹனியகுரு சங்கரரும் அனுதினமுன்னை நினைந்தவரும் 
அருளிறையெனவணங்கிவரும்  ,, பார்
,
வதிபர மே,ஸ்வராகரம் குவித் துனைப் பணிந்தேன் ,, நாரணன் ஸோதரி

பார்
 ,வதிபர மே,ஸ்வராகரம்குவித் துனைப் பணிந்தேன்..

ஞானசம்பந்தர் ஸுந்தரர் அப்பர்
வாசகம் சொன்ன மாணிக்கமென 

நால்வ ரும்,து  திக்,கும் ஹரனே  நாயகனேநம் ப்ரம்மனெனும்
நான் முகன்ஸதி ஸோதரனே   ஈசன் மாலயனே  நேசன் 
அன்பினிலே நீந்திவரும் - நெஞ்சிலுறை  நாமம் மறவேன்

நாளும் சிவமே நாதனே நமஸிவாயனே

நான்மறை  ஓதும் நல்,லறிவே,,, 
ஞானத்தின் மோனப் பொருளே  நன்மையை நல்கிடும் – அக்
காரிகையுமைகரமுடையனே வா  

கா,,,ரெனுமக்ஞானம் தீ,,,,ருமே இந்நேரம்

காரிகையுமைகரமுடையனே வா 
வான்… நதி கங்,கை,யும்,    சூ,,டிய நி,,வொ,டும்  காக்கும் வெண்பனிக்  கைலாஸ வாஸனே கதியெ,ன, வந்தடைந்தேன்  -   அஜபா நடனத் தாரூர் ஐயனே ஆதி சிவனே 
ஆனந்தம் நிலவட்டுமே – எங்கும் 
ஆனந்தம் நிலவட்டுமே - அகிலம் எங்கும் 
ஆனந்தம் நிலவட்டுமே.