Tuesday, May 6, 2014

அஞ்சு நிமிஷத்துல நின்னுடும் (அ) ஏ மாற்றுத் திறனாளியே…

Photo Courtesy: Chennai Zoom . Com

Besant Avenue சாலையில் நான்கைந்து போக்குவரத்துக் காவலர்கள் வாஹனாதிகளையும் அதில் ஆரோஹணித்துச் செலுத்திக்கொண்டிருந்த பேரரசர்களையும் நோட்டம் விட்டபடி, சிலரிடம் தகுந்த ஓலைநறுக்கு இருக்கிறதா என்று சோதித்துக்கொண்டிருந்தார்கள். இல்லாதவர்கள் ஏதேனும் முத்திரை மோதிரம் காட்டினால் தப்பிக்கக்கூடும். 

நான்கு மணி ஆகிவிட்டதால் உள்ளே செல்ல முடியாது என்று தியஸாஃபிகல் சொஸைட்டியின் காவலர் யாருக்கோ உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தார். வார இறுதியைக் கொண்டாட விரைந்து கொண்டிருந்த வாகனங்களால், அடிக்கடி இமைக்கப்படும் கண்கள் போல பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் அச்சாலை மறைந்தும் தெரிந்தும் தூரத்தே வளைந்தது. வளைவுக்கு
100 அடிகள் முன்னால் என் போன்றவர்கள் ஓட்டிச்செல்லும் ஒரு ஸ்கூட்டி (retrofitted - modified for the handicapped) நடுரோட்டில் ஏறேக்குறைய குறுக்காக நின்றிருந்தது. அதனருகே போலியோ வந்த ஒரு மனிதர் வாயில் கொஞ்சம் நுரைதள்ள விழுந்துகிடந்தார்.

வலிப்பு.

அவரைச் சுற்றி சில இளைஞர்கள், பெண்கள் அதிர்ச்சியாக எவ்வாறு உதவலாம் என்ற கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தனர். கிடப்பவரை ஒருவர் தூக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஐந்தடி இடைவெளியில் என் வண்டியை நிறுத்தி 108-க்குப் ஃபோன் பண்ணட்டுமா என்றேன். யாரோ ஒருவர் பண்ணுங்க சார் என்றார். டயல் செய்தபடி, ’இங்க கொஞ்ச தூரம் முன்னாடி ட்ராஃபிக் போலிஸ் இருக்காங்களே, யாராவது சொன்னீங்களா?’


அதற்குள் தீனமான முனகல் வெளிப்பட்டது. ’அஞ்சு நிமிஷத்துல சரியாயிரும் சார்’. ‘He says he will be alright in five minutes’. உடனே யாராலோ அது மொழிபெயர்க்கப்பட்டது. இருவராக அவரை கொஞ்சம் நிமிர்த்தினார்கள். ஊனமுற்றவர்களைத் தூக்கிவிடும் உயரமும் balance-ம் அவரவருக்கேற்றபடி மாறும். அவர் மேலும் தீனமாக, ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்' என்றார். தூக்கி சாலையோர நடைபாதையில் அவரை அமர்த்தியதும் தூக்கியவரின் இரு முழங்கால்களையும் கட்டிக்கொண்டு முகம் புதைத்து அழுதார். கால்களை விடவேயில்லை. நட்டநடுச் சாலையில் எழுந்திருக்கவியலாது விழுந்து கிடக்கும் அவமானம் கண்களில் நீராய் வழிந்தது. சுயபரிதாபம் மேலிட, ’சரியாயிடுவேன் சார்… ரெண்டு நிமிஷம்’ என்று முனகினார். ஏதும் செய்யமுடியாமல் என் வண்டியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘கவலப்படாதீங்க…ஒங்களுக்கு ஒண்ணும் ஆகாது. பசங்க, ஃப்ரெண்டுங்க யாராவது நம்பர் இருக்கா? வீடு எங்க?’ என விசாரித்தார்கள். ‘அதெல்லாம் வாணாம் சார்.. சரியாயிடுவேன். பெட்ரோல் வேற இல்ல போலிருக்கு. ஒரு அம்பது ரூபா குடுங்க சார். வூட்டுக்குப் போயிடுவேன்…’ மீண்டும் முகம் கோணி அழுகை வந்தது.

சாலையின் எதிர்ப்புறமும் இப்போது ஓரிரு கார்களும் பைக்குகளும் நின்றன. நாங்கள் பாதிச் சாலையை அடைத்து நின்று உதவியில் ஈடுபட்டிருக்க, வலது பக்கமாய் வெளிவந்து அந்த மூன்று சக்கர ஸ்கூட்டியை ஒட்டி குறுக்கே நின்றது நீல நிற பென்ஸ் ஒன்று. இடதுபக்கக் கண்ணாடி கீழிறங்கியது.
“டேய் ஒனக்கு வேறவ்வேலப்பொழப்பே இல்லியா? இதோட இது எத்தனாவது தடவ? சனிக்கெழம நாயித்துக்கெழம ஆச்சுன்னா, இப்படி ரோட்ல வுழுந்திருவியா?
“Sir, don’t entertain him. He is a cheater. I have been seeing him for the past many weeks here. Doing drama.. ஏமாத்திப் பணம் புடுங்க வேண்டியது. சீனப் போட்டு வாங்கற காச எடுத்துக்கிட்டு போய் குடிக்கவேண்டியது… Don’t give him money. I was once a victim too”. ’இல்ல சார்… இல்ல சார்’ என்று அவர் அழுதார்.

மெல்லிய தயக்கதுடன் பர்ஸுகள் உள்ளே சென்றன. சிலர் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், அப்பவே சொன்னேன் பாத்துக்க என்ற ரேஞ்சில் மனைவியிடம் லுக் விட்டனர். மனசு கேக்காமல் ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு கால்களை விடுவித்துக்கொண்டு நகர, அவரவர் வண்டிகள் கிளம்பின. நானும் கிளம்பினேன். தொண்ணூற்றொன்பது சதம் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாகவே இருக்கட்டும்; ஒரு சதமேனும் உண்மையாயிருந்துவிட்டால் என்று கேள்வியெழும்ப நான் அந்த வளைவில் திரும்பி, அவர் அறியாவண்ணம் ராங்சைடில் இடதுபக்கச் சாலைக்குள்ளேயே ஒரு யு டர்ன் எடுத்து நின்றுகொண்டேன். அவர் இன்னமும் அழுதுகொண்டிருந்தார்.

Wildlife Photographer போலக் காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். அவர் நிதானமாக ப்ளாட்ஃபாரத்திலிருந்து தவழ்ந்து இறங்கினார். நெகிழ்ந்திருந்த அரைக்கை சட்டையின் கீழிரண்டு பட்டனும் அவிழ்ந்து அசைந்ததில் வயதிற்குப் பொருத்தமாக வளர்ந்திராத கால்கள் இல்லாதது போலவே இருந்தன. அவரைப் பார்க்கையில் வண்டி மிகப் பெரியதாய்த் தோன்றியது. வீல் பஞ்சராகி ஒரு தினசரியை விரித்து சாலையோர நடைபாதையில் அமர்ந்து காத்திருக்கையில், வண்டிக்குப் பின்னால் இருந்த என்னைக் கவனியாமல், ‘எங்கய்யா வண்டிய நிறுத்திட்டுப் போய்ட்டான் போல இருக்குஎன்று காவலர் ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது.

வாயைத் துடைத்தபடி அவர் ஒரு கையால் அவ்வண்டியை முன்னும் பின்னுமாக அசைத்தசைத்து தனக்கருகில் இழுத்துக்கொண்டார். அதன் ஹேண்டில்பாரின் அடியிலிருந்த இடைவெளியில் எதையோ வைத்தார். ஏற முயற்சி செய்கிறார், போய் எதேனும் கேட்கலாமென்று எண்ணினேன். ஒரு கையால் வண்டியின் ஓரத்தைப் பற்றி இன்னும் ஒரு இழு…. மீண்டும் சாலையின் குறுக்கே வந்தது வண்டி. அதனருகில் படுத்துவிட்டார். தலையுயர்த்தி பைக்கோ காரோ வருகிறதா என்று பார்த்தார். 
விட்டால் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுவதுபோல் ஒரு கை வண்டியின் ஓரத்தை பிடித்திருக்க, சாலையின் வெம்மையில் முதுகு முழுவதும் தரையோடுதரையாய்ப் படர்ந்திருக்க, இன்னொரு கையைக் தூக்கமுடியாமல் தூக்குவதுபோல உயர்த்தி இன்னொருமுறை அனாதரவாகக் கிடக்க ஆரம்பித்தார். வாகனங்கள் வேகம் குறைந்தன. மீண்டும் பத்துப் பதினொரு பேர்கள். இனி தாமதிக்க வேண்டாமென ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்து அருகில் சென்றேன். 

என்னோட செல் ஃபோன் தொலஞ்சு போச்சு.. மயக்கம் வருது… ஒதவி பண்ணுங்க என்று அழுதுகொண்டிருந்தார்; ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருந்தனர் மக்கள். விஷயத்தைச் சொன்னேன். நம்பியும் நம்பாமலும் பார்த்தனர். எவரேனும் பர்ஸைப் பிரிப்பதற்குள் சாலையைக் கடந்து கண்ணுக்கெட்டும் தொலைவில் இருந்த போக்குவரத்துக் காவலர்களிடம் சொல்லிவிட்டு வரலாமெனச் சென்றேன். விவரம் சொல்ல ஆரம்பித்ததும்,
‘அவன் பெரிய்ய ஃப்ராடு சார். பணங்கிணம் குடுத்துறாதீங்க’

‘யாரும் புகார் பண்ணலியா? இல்ல, நீங்களா எதுவும் ஆக்‌ஷன் எடுக்கக்கூடாதா? உங்க
Chennai City Traffic Police facebook page-la போஸ்ட் பண்ணா நடவடிக்கை எடுப்பீங்களா? இவ்ளவு பக்கத்துல இப்படிப் பண்றாரு, கேக்க மாட்டீங்களா?

’ஹேண்டிகேப்டு சார்.. அரெஸ்ட் பண்ணா கொடும அது இதுங்கறாங்க.. அம்மா குடுத்த இலவச ஸ்கூட்டர வெச்சுகிட்டு வாராவாரம் இந்தாள் பெரிய்ய ந்யூசென்ஸ்.. 
எதாவது பத்திரிகைல போட்ணும் சார்.

’பாக்கறேன், நண்பர்கள் யார் மூலமாகவாவது சொல்கிறேன்’ என்றதும் ஆவலோடு பெயர் சொன்னார். அறுபத்து ஒன்று வயதான இளைரணித்தலைவரின் பெயரோடு, இருபத்தாறு வயதில் விருமாண்டி மீசையோடு, ‘எதாவது பத்திரிகைல சொல்லுங்க சார்’

இங்கிருந்து பார்க்கையில் அவரை இருவர் தூக்குவது தெரிந்தது. அங்கே செல்வதற்குள் யாரோ பணமும் கொடுத்து வண்டியில் ஏற்றிவிட்டார்கள். பின் தொடர்ந்து சென்றேன். அதற்குள் இரண்டு பல்லவர்கள் உள்ளே புகுந்து உலக சமாதானத்திற்காகப் போரெதிர்ப்பு நடவடிக்கையாய் எங்களைப் பிரித்து விட்டார்கள். நேரே திருவான்மியூரா வலதுபுறம் திரும்பி
LB Road-ஆ என்று நானோ செகண்டில் இங்கிபிங்கி நேரே சிக்னல் வரை சென்று அரைவட்டம் அடித்துத் திரும்பி வந்து இடதுபக்கம் திரும்பினேன். ஆட்டோ ஸ்டேண்டில் விசாரிக்க, அவர்கள் இந்தத் தெரு (அவர்களுக்கு பீச்ரோடு கூட தெரு தான்) கடசீல சிக்னலாண்ட ஒரு ஒயின்ஷாப் இருக்கு ஸார்.. இல்லாட்டி இப்டியே திரும்பினீங்கன்னா, பஸ் ஸ்டாண்ட் முக்குல ஒண்ணுக்குது… நாங்கூட நம்ப ஏரியாலயே அப்டி ஒர்த்தர் ஏமாத்தராருன்னு கேள்விப்பட்டேன் ஸார்’, என்றார்கள். இரு இடங்களையும் பார்த்தேன். வண்டியில்லை என்பது ஏனோ ஏமாற்றமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

பஸ் ஸடாண்ட் முக்கில் இடதுபுறம் திரும்ப,
ஆலயத்தின் உள்ளேயிருந்து வரசித்தி விநாயகர் என்னைப் பார்த்துச் சிரித்தார். இயன்றவரை கௌரவமாக வாழும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கு நன்றியும் அவருக்கும் குடுத்திருக்கலாமில்ல என்ற வேண்டுதலும் தோன்றி மறைந்தது.