Thursday, March 7, 2013

ஆரும் அறியக்கூடாதென...


Happened to see this photo in Facebook. A heart with head phones! The picture reminded me the sweet nothings, the whispers of heart to the wishful ears of love...  





அர்த்தமற்ற வார்த்தைகள் அவர்களுக்கு 
அந்தரங்க உச்சாடனமது நமக்கு.

அஹம் தொலைத்த காதலில் தான் 
ஆழ்மனத்தின் நினைவைக்கூட
ஆவலாய் அறிகின்றன காதுகள்,

ஆரும் அறியக்கூடாதென 
இயர் ஃபோனில் இனிக்கின்றன 
இயம்பிடாத சேதிகள்.

ஈருயிர் அற்றுப்போனதில் 
ஈற்றடிகள் தோன்றியதில்
உளமுவந்த காதலொன்று
உலகளந்து மிதக்குதடி. 

ஊசிமுனைக் கூராய் 
ஊனெங்கும் உழுதுபோட்டு 
ஊர் உறவு மறந்துபோய்
ஊடுருவிக் கூடுதடி.

ஊட்டுதலின் அன்பொன்றை
ஊர்ச்சிதம் செய்தபின்
ஊண் தேடும் நா-வயிறும்.
ஊமையாகிப் போனதடி.

எடுத்தே வைத்துக்கொள்ள
எப்போதும் விழைவேனே,
என்னாவாயிற்று எனக்கு
எல்லாமே உனதென்றேன்.

ஏந்திழையைக் கண்டபின்னே
ஏதுமில்லை வேறொன்றாய்
ஏகத்துவப் பேச்செல்லாம் 
ஏய்ப்பதற்கே இல்லையடி.
ஐம்பொறிகள் அனைத்திற்கும்
ஐந்திரியாய் நீயிருக்க
ஐங்கணைகள் துளைத்ததில்
ஐயையோ! எனையிழந்தேன்.

ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்தபடி பேச்செல்லாம்,
ஒரு பார்வை பரிமாறும்
ஓராயிரம் கதை சொல்லும்.

ஓயாது அன்பு செய்யும்
ஓடையெனக் குளிர்ந்திருக்கும்
ஓராட்டில் அமைதிகொள்ளும்
ஔவுதலில் அமுதுண்ணும்

ஔடதமாய் இதம் செய்யும்
ஔவியம் பேசாமல்
ஔசித்தியம் வார்த்தையாகும்
அஃதொன்றே வாழ்க்கையாகும்.

[ஆரும் - யாரும்
ஊன் - தசை, உடல்
ஊர்ச்சிதம் - உறுதிப்படுத்துதல் - make sure
ஊண் - உணவு
ஏந்திழை - அழகிய பெண்
ஐந்திரி - ஐந்திரன் = இந்திரன்; ஐந்திரி = இந்த்ராணி 
( you are the queen, ruling all my senses)
ஐங்கணைகள் - மன்மதனின் ஐந்து அம்புகள் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம்)
ஓராட்டு - தாலாட்டு
ஔவுதல் - கவ்வுதல் (லிப் லாக்)
ஔடதம் - ஔஷதம் = (காதல்) நோய் தீர்க்கும் மருந்து
ஔவியம் - பொறாமை, தீவினை
ஔசித்தியம் - something which is apt and acceptable]

BTW, கண்ணுக்கு அணிவதை மூக்குக்கண்ணாடி என்பது போல அது என்ன காதுகளுக்காக அணிவதை ஹெட்ஃபோன்ஸ் என அழைப்பது ஏன்? தாங்கிக்கொள்வதாலா? என்னமோ, ஒன்று நிச்சயம், மேலே எழுதிய வரிகளில் அணி-வதை, படிக்கின்ற இ(ல)க்கணமே வதை எல்லாம் உண்டு. :)