Tuesday, October 2, 2012

வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் - என்.சொக்கன்

புதிய ‘புதியதலைமுறையில் நண்பர் என்.சொக்கன் எழுதிய கட்டுரை. #MustRead.


செப்டம்பர் 10-ஆம் தேதி என்னை அழைத்து www.axsmap.com என்ற இணையதளம் பற்றிச் சொன்னார். அதை உடனே பார்த்து, என் அபிப்ராயத்தையும் அவருக்கு எழுதினேன். ஆனால், அவர் கட்டுரையைப் படித்த பின் இன்னும் நன்றாகப் புரிவதுபோல் இருக்கிறது. அதனால் தான் அவர் எழுத்தாளர். :)

ஸ்கேன் செய்து விரைவில் பகிர்கிறேன், பு.த. அனுமதி கிடைத்தால். என்னுடைய கருத்தும் வெளியாகியிருக்கிறது. அதை இப்போது.

ஆக்ஸஸ்மேப் போன்ற ஒரு தளம் நம் நாட்டிலிருக்குமானால் உபயோகமாக இருக்கும்.  அதை எத்துணை பேர் உபயோகிப்பார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிராமல் ஆங்காங்கே, பயணிக்கின்ற என் போன்றவர்கள் அதில் இடங்களைக் குறிப்பிட்டு சிறு குறிப்பு எழுதும் வகையில், அந்நிறுவனங்கள் தாங்களே முன்வந்து விவரங்களைத் தரும் வகையில், Accessibility Unknown என்கிற இடங்களைத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ  தொடர்பு கொண்டு ஏன் இல்லை என்பது போன்ற கோரிக்கையோ, வலியுறுத்தலோ வைக்கும் வகையில் அவை இருக்கலாம். சுற்றுலா பற்றிக்கூட இதைஒருநாள் பார்த்தேன்.

பல இடங்களில், இதற்கான உணர்வு இருக்கிறது. ஐயோ, இவர்கள் சிரமப்படுகிறார்களே என்ற மனவருத்தத்தையும் சமூகம் பதிவு செய்கிறது. ஆனால், அது பெரும்பாலும் உபயோகமாய் ஏதேனும் நிகழ்வதற்காகவின்றி, சமூகம் தன் குற்ற உணர்வில் இருந்து மாயையாக தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்காகவே உள்ளது. அப்படியே, ஒரு சாய்வுப் பாதையோ, அதற்குக் கைப்பிடியோ, லிஃப்டோ அமைப்பவர்கள், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேல் அவை பற்றிய புரிதலே இல்லாதிருக்கிறார்கள். Angle of elevation, Space needed inside a lift, handrail with grip, how wide a ramp should be என்பதெல்லாம் (தெரியாமல் என்று சொல்லமாட்டேன்) அலக்ஷியப்படுத்தப்பட்டே அவை நிர்மாணிக்கப்படுகின்றன. 

கல்வி, உணவு, பயணம், கேளிக்கை போன்றவற்றில் நாங்களும் ’விளிம்பு நிலை மனிதர்கள்’ தான். மீனாட்சி கல்லூரிக்குக் கச்சேரி வாசிக்கப்போன போது, அங்கு பொறுப்பாளர்கள், லெக்சரர்களிடம் ramp குறித்துப்பேசினேன். நடக்கமுடியாத ஒரு பெண் தடைகளைத் தாண்டி தங்கள் கல்லூரியில் படிப்பதாகப் பெருமை பட்டுக்கொண்டார்கள். “ஏம்மா, ஒங்ககிட்டயெல்லாம் இவ்வளவு கல்வியறிவு இருக்கு. கம்யூனிக்கேஷன், அரசியல், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தருகிறீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மாணவிகளின் சேற்றுக்காலடி மண்ணை உடலெங்கும் தீற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணைப் பெருமையாகப் பேசுவதை விடுத்து, சில ஆயிரங்கள் செலவுல வேணுங்கற எடங்கள்ல ரேம்ப் வெக்கக்கூடாதா என்று கேட்டேன்’ அவர்களின் பாரம்பரியப் பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வினாவொன்றை விடுத்ததாய் வெறுப்புப் பார்வையொன்றை வீசியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை அவர்கள்.

நாங்கள், விளிம்புநிலை மனிதர்கள். ரயில் நிலையங்களில் நுழையலாம்; ரயிலுக்குள் நுழைய முடியாது. கடலென்றால் மணலின் ஸ்பர்சம் கூட தெரியாது; தூரமாய்ச் சாலையில் இருந்து எட்டிப்பார்க்கவேண்டும். திரையரங்குகளின் வாசல் வரை செல்லலாம். தப்பித்தவறி உள்ளே நான்கு பேரகளாய்த் தூக்கிச் சென்றுவிட்டாலும், குளிர்பானம் ஏதும் குடித்து வைத்து இயற்கையின் அழைப்பை ஏற்க நேர்ந்தால், ப்ராரப்த கர்மம் என்பதை அநுபவித்துத் தெரிந்துகொள்ளலாம். உனவகங்களுக்குச் செல்லலாம்; பார்க்கிங் அல்லது பாத்ரூம் அருகே சாப்பிடவேண்டும். பாவமூட்டைகளால் நிரம்பிய முதுகோடு எந்தக் கோயில் படிக்கட்டையும் தாண்டவியலாது. வீதியுலா வந்தாலன்றி இறை தரிசனம் இல்லாது போகும். வீல்ச்சேர் இருந்தாலும் நடைபாதையில் ஏற முடியாமல், பல்லவன்களுக்கும் தண்ணி லாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திப் பிழைக்கவேண்டும். ஏனெனில், நடை பாதைகள் சாய்வு அமைப்பின்றியும் போதிய அகலமின்றியோ, குறுக்கே ஒரு விளக்குக் கம்பமோ அல்லது அங்கும் திறந்தே கிடக்கும் ஒரு பாதாளச் சாக்கடைப் பள்ளமோ இல்லாமல் இருக்காது.

புதுதில்லியில் ஒரு இடம்
சென்ற மாதம் சென்னை வானொலி நிலையத்தில் கச்சேரிக்காக குறித்த நேரத்திற்கு முன்பே சென்றும், பாதையின் குறுக்கே நின்ற வாகனத்தால் வெகு நேரம் காத்திருந்தேன்.
தலைநகரம் முதல் தாய்நாட்டின் மறுகோடி வரை இது தான் நிலை. சாலையில் விரைந்துகொண்டிருக்கையில் பெய்கின்ற எந்த ஒரு மழையும் என்னை நனைத்து ஊற வைக்காமல் இருந்ததில்லை. கடைகளின் வாசல்களும் பேருந்து நிறுத்தங்களும் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன கோவர்த்தன கிரிகள். அதைச் சுட்டு விரலில் தாங்கி மக்களை வாழ்விக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும், ஆள்காட்டி விரலை அரசியலுக்கும், மோதிர விரலை கூட்டணிகளுக்கும், கட்டைவிரலை நாமம் போடுவதற்கும் நேர்ந்துவிட்டதால், எங்களைப் போன்றவர்களுக்காக மீதம்வைத்திருப்பது நடு விரல் தான். 

மொபைல் இல்லா மனிதர்களே இல்லா இத்தேசத்தில், நடுத்தெருவில் நின்றபடி பீட்சாவும் பர்கரும் ஆர்டர் செய்து உண்ணமுடியும், ஜெமினி பாலத்தின் அடியில் இருக்கிறேன் வந்து பார் என்றால் வங்கி முகவர்கள் அங்கேயே வந்து கடன் கூட கொடுப்பார்கள். எது முக்கியமாக வேண்டுமோ அது தான் இருக்காது. எங்களுக்காக 'Dial A Toilet', 'Call A Lift', 'Ramps At Your Doorstep' போன்ற உன்னதமான திட்டங்களை மனதில் தேக்கி, அன்பு பொங்கக் காத்திருக்கக்கூடும் அரசுகள்.

உணவகங்களும், தியேட்டர்களும் இருக்கட்டும்; ஊனமுற்றோர்-வயதானவர்களின் அத்யாவசியத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலே, சமூகத்தில் சற்று கௌரவமாக வாழ்ந்துவிடுவோம். ஓட்டுப் போடுமிடங்களில் கட்டாயமாக்கப் படுகின்ற சாய்வுப் பாதைகள், வேறெங்கும் இல்லையெனினும் எவரும் கவலைப் படுவதில்லை.

அரசும் தனியாரும் சமூகமும் ’நான் கால் வெக்கற எடத்துல தான் நீ கை வெக்கற.. அடங்கு’ என்று பஞ்ச் டயலாக் பேச ஆசைப்படுகின்றனவோ என்னவோ.

8 comments:

  1. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    நான் வீடு கட்டினால் உங்களை அழைக்கும் வகையில் கட்டுவேன் என உளமாற உறுதியளிக்கிறேன்.

    ReplyDelete
  2. இதை விட என்ன சந்தோஷம் வேண்டும் எனக்கு.. தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. கண்டிப்பாக காலம் மாறும். அரசு கவனம் கொள்ளும் நிலை வரும்.

    ReplyDelete
  4. ’சரி! வேறெ யாருக்கோ சிரமம் இருக்கு....வாஸ்தவம். இதிலெ நாம் என்ன செய்யமுடியும்? அரசாங்கம் கவனிக்கணும்!’ என்று தாண்டிப்போகும் மனோநிலை தான் அதிகமாக இருக்கிறது. தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது நேரும்போது தான் இதன் வலியை கொஞ்சமாவது உணரமுடியும்.
    நம்ம வீட்டுக்கு திருடன் வராதவரை சந்தோஷம்.

    ReplyDelete
  5. தலைப்பே அருமை..அதான் சொக்கன்..

    ReplyDelete
  6. மீண்டும் மீண்டும் சொல்லியும் மாறாதவர்களை என்ன சொல்றது! கையாலாகம் இருப்பதை நினைத்து வருந்துவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியலை. :(

    ReplyDelete
  7. எவ்வளவு விஷயங்களை granted-ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்!

    //ப்ராரப்த கர்மம் என்பதை அநுபவித்துத் தெரிந்துகொள்ளலாம்//
    கண்களில் நீர் வர வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete