Wednesday, October 31, 2012

நீலப் புயல்


நேற்று இதே நேரம் ”வெட்சி புனையும் வேளே போற்றி” என, வெட்சிப்பூக்களைச் சுவைத்தபடி மின்னல் போல செடிகள், கொய்யா மரம், வேப்ப மரம் என அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த  குருவித் தம்பதியை இன்று காணவில்லை.

உள்ளங்கையில் உருட்டி வைத்த சிறியதொரு பஞ்சுமிட்டாய் போல மொழுக்கென்ற தலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் .

காகங்கள் ஓரிடத்தில் அமர்கின்றன; சில விநாடிகளில் அவநம்பிக்கையுற்று அங்கிருந்து கிளம்பி மொட்டைமாடிகளின் பன்னீர் செம்புகளின் இடையே நெருக்கியமர்ந்து, அங்கும் நிம்மதியின்றி வேறு இடம் தேடுகின்றன. கிளிகளும் அவ்வாறே. ஆறேழு காகங்களும் நான்கு கிளிகளுமாய் பறக்க முயன்று, விசை போதாத வில்லிலிருந்து குறி தவறி எய்யப்பட்ட அம்புகளைப் போல் இடம் மாறி விழுகின்றன; காற்று அடங்குவதற்காய்க் காத்திருந்து மீண்டும் மீண்டும் எழுகின்றன.

சிங்கத்திற்கு அஞ்சி மரமேறிய மனிதன் போல, அம்மாவை அணைத்துக்கொண்டிருக்கும் குரங்குக் குழந்தைகள் போல,  முதிராத கொய்யாக் காய்கள் காற்றில் தழைந்து நிலம் உரசும் கிளைகளை இறுகப்பற்றி நிமிர்கின்றன. இன்னுமும், மரத்தின் அங்கமாய்த் தான் இருக்கிறோம் எனப் பசுமையாய் நீலம் நோக்கி நகைக்கின்றன.

பாகனைக் கீழே தள்ள உடல் உலுக்கிப் பிளிறும் மதம் கொண்ட யானை போல, வேப்ப மரம் சிகையை முடிந்துகொள்ளாத கோபமான முனிவன் போல் ஆடுகிறது. கால்கள் இறுக்கி வாரணத்தின் வயிற்றை அணைத்து, ஆவியை மீட்டுக்கொள்ள அலைபாயும் அங்குசமில்லாப் பாகன் போல, ஒரு காகம் தன்  கால்களால் ஒரு கிளையை அழுந்தப்பிடித்தபடி தன் கூடு விழுந்து விடுமோ என்று தியானம் போல அதையே நோக்கியபடி அமர்ந்திருக்கிறது. அது சொல்லும் செய்திகளின் ஓசைக்கு, வேறு மூலைகளிலிருந்து சில காகங்கள் இருந்த இடத்திலிருந்து பதிலளிக்கின்றன. இணையச் சூழலின் இம்சைகள் ஏதுமின்றி அவை ஆரோக்கியமாக விவாதிப்ப்பதைப் போலவே தோன்றுகிறது.

காகம் - கூடு
காற்றுக்கு மரம் சாய்ந்தபோது, காக்கையின் யாக்கையின் பின்னே வெளிச்சம்.



புதிதாகக் காரோட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஹோண்டா சிட்டியின் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை பின் வைக்காமல், அநியாத்துக்கு அமுக்கியபடி, அடிப் பிரதக்ஷிணம் போல அதை காம்பவுண்டை விட்டு வெளியே எடுத்து, ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பதடி என்ற விகிதத்தில் காரைச் செலுத்தி நீலத்தின் வேகத்தைப் பகடி செய்கிறார்.

‘ஏண்டி கிருத்திகா.. அது என்ன எதாவது போர்வெல் ரிக் வண்டியா? இந்தக் கத்தல் கத்தறதே’, என்றேன். அவள் குறும்பாகச் சிரித்தபடி, ‘ மாமா... அது வூஃபர் கார்’ என்றாள்.

இதற்கிடையில் கேத்ரினா, ஸாண்டி, நீலம் (நிலமா நீலமா என்ற குழப்பம் வேறு) என்று புயலுக்கு ஏன் பெண்கள் பெயராகவே வைக்கிறார்கள் என்று ட்விட்டர்-ஃபேஸ்புக் மஹாஜனங்கள் கவலைப் பட்டார்கள். நானும் கற்பனை ஊற்று பொங்கி வாரியடிக்க என்னாலான ஸ்டேட்டஸ்களைப் போட்டேன்.

1. பயலா இருந்தா ஆம்பள பேர் வெக்கலாம். புயலாச்சே, அதான் பொம்பளங்க
பேர் வெச்சுட்டாங்க.

2. அட்லீஸ்ட், அடுத்த புயலுக்காவது ‘வெடிமுத்து’ சூனாபானா’ ‘வடக்குபட்டி
ராமசாமி’-ன்னு ஆம்பளங்க பேர் வெய்யுங்கப்பா.

3. கண்ணா, அடிச்சுப் பேஞ்சுதுன்னா அது நீலம்; தூறிட்டு விட்டுட்டா அது
சொட்டு நீலம் #Cyclone #Nilam

4. நாளைக்கும் இஸ்கோலு, காலேசு எல்லாம் லீவாம். விடுமுறை தின சிறப்பு
கண்ணறாவியெல்லாம் பாத்துக்கிட்டிருக்காம கத்திக்கப்பலாவது செஞ்சு
வெள்ளாடுங்க புள்ளகளா.

5. முன்பெல்லாம் ஏகபட்ட கட் அவுட்டுகள் இருக்கும்,காற்றும் தடுக்கப்பட்டு
பிரிக்கப்பட்டு திசைமாறி வலுவிழக்கும்.இப்போ எங்க அதெல்லாம் ஹ்ம்ம்..

6. நிலமா நீலமா என்று கேட்டால், புயல் பாதிப்புகள் அதிகமாக இருப்பின்,
நீலமா(க) நிலம் & நீல மாநிலம்.

7. It made the Sandy Marina into a Watery Beach and the beach road to Sandy Road.
#Nilam > Sandy.

8. 
இதுவும் கடந்து போகும்; This shall too pass.
#Nilam 
#Cyclone 
#Major :)))

9. 
மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்து
செல்லும் - வானிலை மையம். 
அப்போ, நீலம் கடந்த நிலம்-னு ஒரு   கட்டுரை யாரானும் எழுதுவாங்களா?


அணில்களும் பூனைகளும் எங்கேயென்றே தெரியவில்லை. ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து கதவில் அமர்ந்து என்னை சற்றே நோட்டம் விட்டபின், இங்க தங்கி உன்னையெல்லாம் என் ரூம் மேட்டாக வைத்துக்கொள்ள முடியாது என ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டது.


Wednesday, October 17, 2012

மறதி


முந்தா நாள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குக் கொண்டு சென்ற ஒலிம்பஸ் டிஜிட்டல் வாய்ஸ் ரெகார்டரை அங்கேயே மறந்துவிட்டு பாதி தூரம் வந்துவிட்டேன். திரும்பப் போய்த் தேடியும் விசாரித்தும் பார்த்ததில் இப்போது வரை கிடைக்கவேயில்லை; இனியும் கிடைக்க way இல்லை.
எங்கிருந்து ஆட்கொள்கிறது மறதி?

இப்போது தான் ஆனந்த விகடனில் மரம் கருணாநிதி பற்றிய கட்டுரை படித்தேன். பேட்டியின் முதல் வரியே ஆச்சிரியம். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லாத நாட்களில் போகிற வழியில் அரசல் புரசலாகக் காதில் விழுந்த பாடல் அது.

’தாய் நிலம் தந்த வரம் தாவரம்.. அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’

எம்.எஸ்.வி.யின் குரலோடு அதன் மெட்டும் திஸ்ர கதியும் சேர்ந்து மனதினுள் குரலாய் ஒலித்தது. எப்படியும் இருபது வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் இப்பாடலைக் கேட்டு. எது நினைவில் இருத்தியது இதை, இவ்வளவு அழுத்தமாய்? இப்போது முணுமுணுக்கையில், ’பறந்தால் மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் - இனிமை நிறைந்த உலகம் இருக்கு’ என்று ’மகிழ்வார்கள் யாவரு’மிற்குப் பிறகு கோத்துவிட்டால் தாளமும் மெட்டும் பொருந்துகிறது.  அதைச் ச்துஸ்ரமாக 4/4-ல் பாடினால் ’காடெல்லாம் பிச்சிப்பூவு... கரையெல்லாம் செண்பகப்பூவு.. நாடே மணக்குதுங்க - அந்த நல்ல மக போற பாதை...’ என்றும் கேட்கிறது. கிராமிய இசையின் மெட்டு அது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், எப்போதோ கேட்ட ட்யூனுக்குப் பொருத்தங்கள் கூட இப்போது தோன்றுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐஃபோன் தொலைந்தது; அதற்குச் சில வருடங்கள் முன்பு வேறு ஒரு ரெக்கார்டர், பென் ட்ரைவ். இவை தவிர, அடிக்கடி தொலைக்கும் பேனா, பர்ஸ், புத்தகம், ரசீது மற்றும் எங்கே வைத்தோம் என்ற நினைவுப் பிழைகள் வேறு. எப்படியும் எதையாவது தொலைத்தோ மறந்தோ விடுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆண்டுப்பலனை மேய்ந்த பொழுது, ‘உங்கள் ராசிக்கு குடையை எங்கு வைத்தோம், கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தான் வந்தோமா என்பன போன்ற விஷயங்களை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஆனால், முக்கியமானவற்றை மறக்க மாட்டீர்கள்’ என்று படித்துவிட்டு மகிழ்ந்ததை எண்ணிக்கொள்கிறேன். இப்போது, ’இதுல என்ன சிரிப்பும் சந்தோஷமும் வேண்டிக்கெடக்கு உனக்கு, புத்திகெட்டுப் போயிண்டு இருக்கே, தெரியறதோ... மான்கெட்’, என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

பார்த்தீர்களா... தலைப்பு வெக்கவே மறந்து, அப்படியே பதிவிட இருந்தேன்!

இன்னும் கொஞ்ச நாள் ஆனதும்,  Blog-லயா Twitlonger-லயா, 750words-லயா Facebook-இலா ட்விட்டரிலா... எதில் பகிர்கிறேன் என்றெல்லாம் குழப்பம் வருமோ?

Tuesday, October 2, 2012

வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் - என்.சொக்கன்

புதிய ‘புதியதலைமுறையில் நண்பர் என்.சொக்கன் எழுதிய கட்டுரை. #MustRead.


செப்டம்பர் 10-ஆம் தேதி என்னை அழைத்து www.axsmap.com என்ற இணையதளம் பற்றிச் சொன்னார். அதை உடனே பார்த்து, என் அபிப்ராயத்தையும் அவருக்கு எழுதினேன். ஆனால், அவர் கட்டுரையைப் படித்த பின் இன்னும் நன்றாகப் புரிவதுபோல் இருக்கிறது. அதனால் தான் அவர் எழுத்தாளர். :)

ஸ்கேன் செய்து விரைவில் பகிர்கிறேன், பு.த. அனுமதி கிடைத்தால். என்னுடைய கருத்தும் வெளியாகியிருக்கிறது. அதை இப்போது.

ஆக்ஸஸ்மேப் போன்ற ஒரு தளம் நம் நாட்டிலிருக்குமானால் உபயோகமாக இருக்கும்.  அதை எத்துணை பேர் உபயோகிப்பார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிராமல் ஆங்காங்கே, பயணிக்கின்ற என் போன்றவர்கள் அதில் இடங்களைக் குறிப்பிட்டு சிறு குறிப்பு எழுதும் வகையில், அந்நிறுவனங்கள் தாங்களே முன்வந்து விவரங்களைத் தரும் வகையில், Accessibility Unknown என்கிற இடங்களைத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ  தொடர்பு கொண்டு ஏன் இல்லை என்பது போன்ற கோரிக்கையோ, வலியுறுத்தலோ வைக்கும் வகையில் அவை இருக்கலாம். சுற்றுலா பற்றிக்கூட இதைஒருநாள் பார்த்தேன்.

பல இடங்களில், இதற்கான உணர்வு இருக்கிறது. ஐயோ, இவர்கள் சிரமப்படுகிறார்களே என்ற மனவருத்தத்தையும் சமூகம் பதிவு செய்கிறது. ஆனால், அது பெரும்பாலும் உபயோகமாய் ஏதேனும் நிகழ்வதற்காகவின்றி, சமூகம் தன் குற்ற உணர்வில் இருந்து மாயையாக தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்காகவே உள்ளது. அப்படியே, ஒரு சாய்வுப் பாதையோ, அதற்குக் கைப்பிடியோ, லிஃப்டோ அமைப்பவர்கள், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேல் அவை பற்றிய புரிதலே இல்லாதிருக்கிறார்கள். Angle of elevation, Space needed inside a lift, handrail with grip, how wide a ramp should be என்பதெல்லாம் (தெரியாமல் என்று சொல்லமாட்டேன்) அலக்ஷியப்படுத்தப்பட்டே அவை நிர்மாணிக்கப்படுகின்றன. 

கல்வி, உணவு, பயணம், கேளிக்கை போன்றவற்றில் நாங்களும் ’விளிம்பு நிலை மனிதர்கள்’ தான். மீனாட்சி கல்லூரிக்குக் கச்சேரி வாசிக்கப்போன போது, அங்கு பொறுப்பாளர்கள், லெக்சரர்களிடம் ramp குறித்துப்பேசினேன். நடக்கமுடியாத ஒரு பெண் தடைகளைத் தாண்டி தங்கள் கல்லூரியில் படிப்பதாகப் பெருமை பட்டுக்கொண்டார்கள். “ஏம்மா, ஒங்ககிட்டயெல்லாம் இவ்வளவு கல்வியறிவு இருக்கு. கம்யூனிக்கேஷன், அரசியல், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தருகிறீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மாணவிகளின் சேற்றுக்காலடி மண்ணை உடலெங்கும் தீற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணைப் பெருமையாகப் பேசுவதை விடுத்து, சில ஆயிரங்கள் செலவுல வேணுங்கற எடங்கள்ல ரேம்ப் வெக்கக்கூடாதா என்று கேட்டேன்’ அவர்களின் பாரம்பரியப் பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வினாவொன்றை விடுத்ததாய் வெறுப்புப் பார்வையொன்றை வீசியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை அவர்கள்.

நாங்கள், விளிம்புநிலை மனிதர்கள். ரயில் நிலையங்களில் நுழையலாம்; ரயிலுக்குள் நுழைய முடியாது. கடலென்றால் மணலின் ஸ்பர்சம் கூட தெரியாது; தூரமாய்ச் சாலையில் இருந்து எட்டிப்பார்க்கவேண்டும். திரையரங்குகளின் வாசல் வரை செல்லலாம். தப்பித்தவறி உள்ளே நான்கு பேரகளாய்த் தூக்கிச் சென்றுவிட்டாலும், குளிர்பானம் ஏதும் குடித்து வைத்து இயற்கையின் அழைப்பை ஏற்க நேர்ந்தால், ப்ராரப்த கர்மம் என்பதை அநுபவித்துத் தெரிந்துகொள்ளலாம். உனவகங்களுக்குச் செல்லலாம்; பார்க்கிங் அல்லது பாத்ரூம் அருகே சாப்பிடவேண்டும். பாவமூட்டைகளால் நிரம்பிய முதுகோடு எந்தக் கோயில் படிக்கட்டையும் தாண்டவியலாது. வீதியுலா வந்தாலன்றி இறை தரிசனம் இல்லாது போகும். வீல்ச்சேர் இருந்தாலும் நடைபாதையில் ஏற முடியாமல், பல்லவன்களுக்கும் தண்ணி லாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திப் பிழைக்கவேண்டும். ஏனெனில், நடை பாதைகள் சாய்வு அமைப்பின்றியும் போதிய அகலமின்றியோ, குறுக்கே ஒரு விளக்குக் கம்பமோ அல்லது அங்கும் திறந்தே கிடக்கும் ஒரு பாதாளச் சாக்கடைப் பள்ளமோ இல்லாமல் இருக்காது.

புதுதில்லியில் ஒரு இடம்
சென்ற மாதம் சென்னை வானொலி நிலையத்தில் கச்சேரிக்காக குறித்த நேரத்திற்கு முன்பே சென்றும், பாதையின் குறுக்கே நின்ற வாகனத்தால் வெகு நேரம் காத்திருந்தேன்.
தலைநகரம் முதல் தாய்நாட்டின் மறுகோடி வரை இது தான் நிலை. சாலையில் விரைந்துகொண்டிருக்கையில் பெய்கின்ற எந்த ஒரு மழையும் என்னை நனைத்து ஊற வைக்காமல் இருந்ததில்லை. கடைகளின் வாசல்களும் பேருந்து நிறுத்தங்களும் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன கோவர்த்தன கிரிகள். அதைச் சுட்டு விரலில் தாங்கி மக்களை வாழ்விக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும், ஆள்காட்டி விரலை அரசியலுக்கும், மோதிர விரலை கூட்டணிகளுக்கும், கட்டைவிரலை நாமம் போடுவதற்கும் நேர்ந்துவிட்டதால், எங்களைப் போன்றவர்களுக்காக மீதம்வைத்திருப்பது நடு விரல் தான். 

மொபைல் இல்லா மனிதர்களே இல்லா இத்தேசத்தில், நடுத்தெருவில் நின்றபடி பீட்சாவும் பர்கரும் ஆர்டர் செய்து உண்ணமுடியும், ஜெமினி பாலத்தின் அடியில் இருக்கிறேன் வந்து பார் என்றால் வங்கி முகவர்கள் அங்கேயே வந்து கடன் கூட கொடுப்பார்கள். எது முக்கியமாக வேண்டுமோ அது தான் இருக்காது. எங்களுக்காக 'Dial A Toilet', 'Call A Lift', 'Ramps At Your Doorstep' போன்ற உன்னதமான திட்டங்களை மனதில் தேக்கி, அன்பு பொங்கக் காத்திருக்கக்கூடும் அரசுகள்.

உணவகங்களும், தியேட்டர்களும் இருக்கட்டும்; ஊனமுற்றோர்-வயதானவர்களின் அத்யாவசியத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலே, சமூகத்தில் சற்று கௌரவமாக வாழ்ந்துவிடுவோம். ஓட்டுப் போடுமிடங்களில் கட்டாயமாக்கப் படுகின்ற சாய்வுப் பாதைகள், வேறெங்கும் இல்லையெனினும் எவரும் கவலைப் படுவதில்லை.

அரசும் தனியாரும் சமூகமும் ’நான் கால் வெக்கற எடத்துல தான் நீ கை வெக்கற.. அடங்கு’ என்று பஞ்ச் டயலாக் பேச ஆசைப்படுகின்றனவோ என்னவோ.