Tuesday, April 20, 2010

வெப்பத்தை விரும்பியே..

எல்லோரும் ஏசினாலும்
ஏ.சி.யைத் தான் தேடினாலும்,
ஏதுமில்லை பிணக்குகள்
எனக்கும் எரி வெயிலுக்கும்.

பாரம் மிகுந்தவை
பனி மிகும் காலங்கள்,
உடம்போடு ஏற்றிய
துணிகளோ சுமைகள்.

உடலைத் தீண்டவே
உடைகள் தாண்டாது,
உள்ளம் தீண்டுதல்
என்று தான் நடக்கும்?

ஆசையாய்க் கிள்ளியும்
அகப்படாது சருமம்,
ஆனாலும் கிள்ளினேன்,
கம்பளி என்றவோர்
கடுமை சூழ் கருமம்..

காலைகள் சுருங்கிப்போய்
மாலைகள் 'மப்பும்'
மந்தமான தாரங்கள் கூட
மந்திகள் உடன் விரையும்.

இயற்கைக்கு மாறாய்
நெருப்புகள் மேலிருக்கும்
புகையோ, அடியிலிருக்கும்
அடித்தவனே அணைப்பதுபோல்,
ஆக்கிகளே போக்கிகளாகும்!

முதலாளித்துவங்கள் வாலறுந்து
பொதுவுடைமை மேலோங்கி
அனைத்துச் சுரப்பிகளும்
வேலை பெறும்...

ஆடைகள் குறைந்து போய்,
ஆதி மட்டும் நாம் சுமக்க,
ஸ்பரிசங்கள் குறைந்து போய்
விலகி நிற்க மனமறியும்.

தெருவோரச் சிறுநீர்கள்
தெரிவதற்குள் காய்ந்துவிடும்
தெரு நாய்கள் கூடலின்றி,
தெரியுமாறு தள்ளியிருக்கும்.


வெப்ப மயமாகுமென்று
அனல் பறக்கும் விவாதங்கள்
Go Green Go Green என்று
கோரிக்கை தரும்
விழிப்புணர்வுகள்...

விழிகளை விழிகள் தொட்ட
விழி, புணர்வுகள் போதுமென
விலகலின் விதியறியும்
வீணல்ல, நேர் துருவங்கள்...

விசாரித்துப் பார்த்தவரை
விரும்புபவர்கள் யாருமில்லை
தனியனாய்த் தான் சுடினும்
தயங்காமல் விரும்புகிறேன்.




(my status message today in Facebook was: i love practicing mrudangam without fan in the awesome veyyil.. :)
many asked why and that is the reason for the kavithai)

4 comments: