Sunday, February 7, 2010

பத்மவிபூஷன்

சிவராமன் சாருக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது, நாகர்கோயிலில் இருந்தேன். மனோ வேகத்தில் உடனே அவரைக் காண வேண்டி  இரந்தது உள்ளம். அடுத்த நாள் காலை பத்து மணி வரை தவிப்பும் ஆனந்தமும் கூடிய நிலையிலேயே இருந்தது மனது. 

இது, புதியதாய் எழுதியது அல்ல, எனினும் இதோ..







குரு வணக்கம் - 2 


முழவுக்கலையின் முதன்மை வேந்தன்-எம்

முன்னோர்கள் முன் செய்த

முற்றிய தவப் பயன்.

முகந்தனில் மலர்ந்த முறுவல் மாறாது

மூவகைக் காலமும் ஐவகை ஜாதியில்

கைவகை ஜாலம் களிநடம் புரிபவன்.

சூர்யனின் கிரணங்கள் சூக்ஷ்மமாய் படர்ந்து

சுரங்களாய்த் தழுவியதில் சூல் கொண்ட ஸாகரம்....

பெருகவே கருக்கொண்டு

பருகவே யிசைதந்து (வேயிசை)

உருகவே யாழ்த்திய (யாழ்)

உமையாள்புரக் கார்முகில்.

என்றுமிரு தங்கமென ( மிரு தங்கமென )

குன்றா சுரங்கமாய்

கன்றுக்குத் தாதியாய்

ஞானத்திற்காதியாய் (‘தா’ ‘தி’ – ‘ஆதி’)

ஸ்வாச லயம் ஓங்கிட – தகப்பன் (‘கிட – தக’)

ஈசனருள் தேங்கிட - துதித்து

தாள நயம் எங்கும் கிடந்திட (எங்“கும்கி”டந்திட)

தன்னிரகற்றுத் தாரகை போலே

உச்சத்தில் உறைகின்ற

ஆகாசா.... புதினம் புரிவாய்...

[ஆகா, சாபு தினம் (தி–நம்)புரிவாய்]

புதிதாய்ச் செய்வாய்..

அறிதலாங்கு அளித்தென்னை (தளாங்,கு)

தெரிதலுக்குள் தள்ளிடுவாய்....


முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் - அவனின்

மைந்தருள் கொம்பன்; முருகனின் அண்ணன்

முழு முதல் நாயகன் - மூஷிக விநாயகன்

திருவடி முகிழ்ந்து திறம்படத் திகழ்பவன்

திரையிலும் தோன்றியே

திசைகளை வென்றவன்.
(மிருதங்கச் சக்ரவர்த்தி)

குருவாய் வந்தெனை லகுவாய்த் தேற்றினாய்

(குரு, லகு திருததம், மாத்திரை)

திருத்தம் செய்தென்னுள் திரிபினைச் சேர்த்தாய்.  

(திரிபு - permutation; சேர்வு - combination)

மனதினை மறைத்திட்ட மாத்திரை நீக்கி

நியதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய்.

(மாத்திரை, யதி, மார்க்கம்)


சித்தி அடைந்தோரே கலைஞராயாவர் – தம்
(ஆவர் – தம்]

சித்தியால் சொல்லினை சிறப்பிக்க வைப்பர்.

அடைதல் என்பதே அகண்டதோர் வேதம்

அதற்காக பாதம் - நடைகள் பல காதம்....
(காக பாதம், நடை, கதி)

கதியெனப் பணிந்தேன்; அதுவே போதும்.


சிவராமன் சார் குறித்த நினைவுகளின் தாக்கமாய் 9.8.07 அன்று எழுதியது.

ஈரோடு நாகராஜன்,
சென்னை – 33

********************************************************

குரு வணக்கம் –1

நான்மறை நினைத்துத் தெளியும் மனம் போல;

ஞானியரை நனைத்தே தெளிந்திடும் கங்கையென,

நானிலமனைத்தும் மேவிடும் நாதமே!

நாதப் ப்ரவாஹமே - உனை

நாடியே வந்திடும்

விருதுகள்,

தந்திடும் ஏற்றம்

தமக்குத் தாமே!

நீ - உமையாள்புரம்;

உன் விழுதுகள் பூச்சரம்.

வாடாவென்னுமுன் வாஞ்சையால் இன்புறும்

"வாடா" மலர்கள் பற்றிடும் நின் கரம்.       

குவலயம் அதனருந் தவலயம் - லாவண்ய

லயமிதே நான் கொண்ட நவமன ஆலயம்.

நித்தமும் நீ தொழும் நிறைகுணவைங்கரம்

நினைந்தே பணிந்தேன்,

நிதமதே என்னறம்.
    

(20.3.2003 அன்று, சிவரமான் சாருக்கு பத்மபூஷன் வழங்கப்போகும் செய்தி அறிந்ததும்...)



[விழுது – his art]

[மலர் – disciple]

[லாவண்ய லய- laya lAvaNyA –his foundation]


7 comments:

  1. அருமை! வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குருவிற்கும். உங்கள் அன்பும், பணிவும் பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. ஜதி சொல்லி துதி பாடியிருக்கிறீர்கள்!
    இரண்டு குருவணக்கங்களும் அருமை!

    ReplyDelete
  3. Romba pramaadam ...Anandam Thandidum Kavithuvam..Vayzhga valamudan

    ReplyDelete
  4. பாராட்டுக்கும் பொய் முக"மேனோ?" நன்றி... :)

    ReplyDelete
  5. Excellent... U have joyfully played with words. At the same time served the purpose (of Guruvanakkam) too.

    Great!

    ReplyDelete